LATEST NEWS
“ஹோஸ்டல் பிள்ளைகளின் அழுகை.. தாயின் குரல் கேட்டதும் கலங்கிய பிஞ்சு முகங்கள்..! நெஞ்சைக் கரைக்கும் வைரல் வீடியோ!”
சமூக வலைத்தளங்களில் விடுதி வாழ்க்கை குறித்த மிகவும் உருக்கமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. படிப்பிற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ முதன்முதலில் வீட்டை விட்டு வெளியேறி விடுதியில் தங்கும் சிறிய குழந்தைகள், ஆரம்பத்தில் புதிய சூழலையும் புதிய நண்பர்களையும் கண்டு மகிழ்ந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல வீட்டின் நினைவும் பெற்றோரின் பாசமும் அவர்களை வாட்டத் தொடங்குகிறது. குறிப்பாக, மாலை நேரங்கள் கடந்து இரவின் அமைதி சூழும்போது, அவர்களுக்குத் தங்கள் குடும்பத்தின் நினைவு அதிகமாகி விடுகிறது என்பதை இந்த வீடியோ பிரதிபலிக்கிறது.
வைரலாகி வரும் இந்த வீடியோவில், விடுதியில் தங்கியிருக்கும் சிறு குழந்தைகள் வரிசையாக நின்று தங்கள் பெற்றோருடன் தொலைபேசியில் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்போது, மறுமுனையில் இருந்து தங்கள் தாயின் அன்பான குரல் கேட்ட அடுத்த கணமே குழந்தைகளின் முகபாவனைகள் அப்படியே மாறுகின்றன. சிலர் தங்களின் அழுகையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தாலும், பெரும்பாலான குழந்தைகளால் தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தாயின் குரலைக் கேட்ட மாத்திரத்திலேயே விம்மி விம்மி அழத் தொடங்குகின்றனர். இந்த எதார்த்தமான காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சைக் கரைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
https://www.instagram.com/reel/DamJ-KHSbZf/?utm_source=ig_web_button_share_sheet
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த உணர்வுப்பூர்வமான வீடியோ, குறுகிய காலத்திற்குள் 1.1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், “விடுதி வாழ்க்கை ஒரு மனிதனை மனரீதியாக வலிமையாக்குவது உண்மைதான்; ஆனால் அதே வேளையில், நாம் நம் அன்பிற்குரியவர்களை விட்டு தூரமாக இருக்கும்போதுதான் குடும்பத்தின் உண்மையான மதிப்பும், அவர்களின் பாசத்தின் விலையும் நமக்குத் புரியும் என்பதை அது கற்றுத் தருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
