LATEST NEWS
கான்பூர் விடுதியில் நேர்ந்த சோகம்.. தூக்கில் தொங்கிய மாணவியின் சடலம்…! டைரியில் மாணவி எழுதி வைத்த ‘அந்த’ கடைசி வரிகள் என்ன..?!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காகாதேவ் கீதா நகர் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில், 19 வயதான பூர்வா சச்சான் என்ற பாலிடெக்னிக் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கான்பூரின் ஜவஹர் நகரைச் சேர்ந்த இவர், ஒரு லாரி ஓட்டுநரின் மகள் ஆவார். படிப்பிற்காக கடந்த ஜூன் 28-ஆம் தேதிதான் இந்த விடுதியின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் தனியாகத் தங்கி படிக்க வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு அவரது மொபைல் போன் தொடர்ந்து ஒலித்தும் அவர் எடுக்காததால் சந்தேகமடைந்த மற்ற மாணவிகள், விடுதி காப்பாளரின் மனைவியிடம் தெரிவித்துள்ளனர். கதவைத் தட்டியும் திறக்காததால், கதவின் இடுக்கின் வழியே பார்த்தபோது மாணவி துப்பட்டாவால் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கான்பூர் போலீசார் மற்றும் தடயவியல் குழுவினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். அந்த அறையைச் சோதனை செய்தபோது போலீசாருக்கு ஒரு டைரி கிடைத்தது. அதில் அந்த மாணவி தனது குடும்பத்தினருக்கு உருக்கமான செய்தி ஒன்றை எழுதியுள்ளார். “எனது திருமணத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்… இனி பணப் பற்றாக்குறை இருக்காது” என்று எழுதிவிட்டு, தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தி கேட்டு மாணவியின் பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை எனத் தெரிந்தாலும், மாணவி இந்த தீவிரமான முடிவை எடுக்கக் காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. போலீசார் விடுதி நிர்வாகம் மற்றும் அங்குள்ள மற்ற மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் சோதனைகளின் முடிவுகளுக்குப் பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
