LATEST NEWS
“என்னது பாஸ் மூணும் ஒண்ணா..?” திமுக, அதிமுக, பாஜக ரகசியக் கூட்டு.. ஒரு தவெக MLA-வுக்கு ₹50 கோடி பேரம்.. சதியை அம்பலப்படுத்திய நிர்மல்குமார்..!!
தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து அரசியல் கூட்டணி மற்றும் ஆட்சி அமைப்பு தொடர்பான ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகத் தவெக அரசின் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அதிரடியாகக் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியலைத் தங்களது வசப்படுத்தும் நோக்கில் இந்த மூன்று கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட முயல்வதாகக் கூறினார். மேலும், தவெக சட்டமன்ற உறுப்பினர்களைப் பணம் கொடுத்துத் தங்களது பக்கம் இழுக்க ரூ.50 கோடி வரை பேரம் பேசப்படுவதாக வெளியாகும் தகவல்கள் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் சாடியுள்ளார்.
தற்போதைய சூழலில் யாருக்கு எத்தனை மத்திய அல்லது மாநில அமைச்சரவைப் பதவிகள் வழங்கப்படும் என்பதிலேயே இந்த மூன்று கட்சிகளுக்கும் இடையே பலப்பரீட்சையும், போட்டிப் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருவதாக நிர்மல் குமார் சுட்டிக்காட்டியுள்ளார். இன்னும் ஓராண்டு காலத்திற்குள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் தனித்துச் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு, இறுதியில் பா.ஜ.க.வுடன் அதிகாரப்பூர்வமாக இணையும் சூழல் உருவாகும் என்றும் எச்சரித்துள்ளார். குறிப்பாக, மு.க. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்காலத்தில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெறப் போவதாகப் பகீர் தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதற்கிடையே, முந்தைய ஆட்சிக்காலங்களில் பத்திரப்பதிவுத்துறை ஊழலின் மையமாக விளங்கியதாகவும், “மினிஸ்டர் கட்டிங்” என்ற பெயரில் முறைகேடாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை முற்றிலும் சீரமைக்கப்பட்டுப் புதிய நிர்வாக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இனி ஊழலில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், பழனி கோவில் நில விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அரசு தரப்பில் யாருக்கும் எவ்விதப் பாதுகாப்பும் அளிக்கப்படாது என்றும் அவர் விவரித்துள்ளார்.
