LATEST NEWS
“சீச்சி.. என்ன கொடுமை இது..! பீட்சா மாவு மிக்சரில் காலை நுழைத்த ஊழியர்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன..?!”
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில், ஊழியர் ஒருவர் பீட்சா மாவு தயாரிக்கும் பெரிய இயந்திரத்தின் மீது ஏறி நின்று, தனது வெறும் காலை மாவு கலவையின் உள்ளே வைத்திருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. “அவர்கள் உணவை காலால் மிதிப்பதை பார்த்திருக்கிறீர்களா?” என்ற கேள்வியோடு பகிரப்பட்ட இந்த வீடியோ, உணவுப் பிரியர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அந்த உணவகத்தின் சுகாதாரமற்ற நடைமுறைகளைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நாம் சாப்பிடும் உணவுகள் எவ்வளவு தூய்மையற்ற முறையில் தயாரிக்கப்படுகின்றன என்பதற்கு இதுவே சாட்சி எனப் பலரும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகச் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த உணவகத்தை மூட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள உணவக நிர்வாகம், வைரலான வீடியோவில் இருப்பது மனிதர்கள் சாப்பிடும் பீட்சா மாவு அல்ல என்றும், அது இயந்திரத்தைச் சுத்தப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகையான கலவை என்றும் கூறியுள்ளது. இயந்திரத்தின் அடிப்பகுதியைச் சுத்தம் செய்வதற்காகவே ஊழியர் அப்படிச் செய்தார் என்று விளக்கம் அளித்துள்ள போதிலும், பொதுவெளியில் இந்த வீடியோ உணவகங்களின் சுகாதாரப் பராமரிப்பு குறித்த பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
