LATEST NEWS
“சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்… இரத்தத்திற்கு இரத்தம்..!” அமெரிக்காவை மிரட்டும் ஈரானின் சர்ச்சை பதாகை..!!!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தங்கள் முறிந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வைக்கப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்ட விளம்பரப் பதாகை சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த பதாகையில், “ரத்தத்திற்கு ரத்தம்” என்ற வாசகத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் சவப்பெட்டியில் இருப்பது போன்ற படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் டிரம்பின் மனைவி மெலனியா மற்றும் அவரது பிள்ளைகளான இவான்கா, டொனால்ட் டிரம்ப் ஜூனியர், எரிக், டிஃப்பனி, பாரோன் ஆகியோரின் புகைப்படங்கள் சவப்பெட்டியின் மீது வைக்கப்பட்டுள்ளது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக தெஹ்ரானில் அமைக்கப்படும் இதுபோன்ற பெரிய சுவரோவியங்கள், ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினரின் ‘ஓவ்ஜ் கலை மற்றும் ஊடக அமைப்பினால்’ வடிவமைக்கப்படுபவை ஆகும். இதற்கு முன்பும் தெஹ்ரானின் ஏங்கெலாப் சதுக்கத்தில் டிரம்பை கருப்பு நிற சவப்பெட்டியில் படுத்திருப்பது போல் சித்தரித்து, “டிரம்பை நாங்கள் கொல்லுவோம்” என்று பாரசீக மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட பதாகை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
