LATEST NEWS
“இனி Google Pay, PhonePe-க்கு காசு கட்டணுமா..? மத்திய அரசின் புதிய டார்கெட்… யாருக்குப் பாதிப்பு..?!”
பெரிய வணிக நிறுவனங்கள் மேற்கொள்ளும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மட்டும் மீண்டும் கட்டணம் விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது இந்த புதிய மாற்றம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கட்டண முறையானது ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் முதல் 1.5 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும் பெரிய வர்த்தக நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தக தளங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் வாய்ப்புள்ளது. மேலும், 2000 ரூபாய்க்கும் அதிகமான தொகையைக் கொண்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்தக் கட்டணம் வசூலிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதேவேளையில், பொதுமக்கள் மேற்கொள்ளும் தனிப்பட்ட பரிவர்த்தனைகளுக்கும், சிறு கடைக்காரர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கும் இதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2016-17 ஆம் நிதியாண்டில் வெறும் 2 கோடியாக இருந்த யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, 2025-26 ஆம் நிதியாண்டில் சுமார் 24,200 கோடியாகப் பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இவ்வளவு பெரிய அளவிலான யுபிஐ கட்டமைப்பைப் பாதுகாப்பாகப் பராமரிப்பதற்கும், அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் தேவையான நிதியைத் திரட்டும் நோக்கிலேயே இந்த கட்டணத்தை மீண்டும் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
