LATEST NEWS
கல்லூரி பசங்க என் புள்ளைய அடிச்சே கொன்னுட்டாங்க… என் பையன் திரும்பி வர மாட்டான்.. ஆனால்… கோவை கல்லூரி மாணவன் அமுதனின் தந்தை கண்ணீர் கோரிக்கை..!!
கோவை அருகே சக மாணவர்கள் நடத்திய தாக்குதலில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உள்பட 5 பேரைச் செட்டிப்பாளையம் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமுதன் (20) என்ற மாணவர், கோவை–பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். இவர் நண்பர்களுடன் அறை எடுத்துத் தங்கிப் படித்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி அதிகாலை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள சக மாணவர் இளவரசனின் அறைக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் செல்போனைப் பறித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்துச் செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டிருந்தது.
அன்று காலையில் அமுதன் தனது நண்பர் ஸ்ரீமனுடன் கல்லூரிக்குச் சென்றபோது, இளவரசனின் நண்பர்கள் அமுதனை வழிமறித்துக் கல்லூரியின் பின்புறப் பகுதிக்கு அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குப் பின் அறைக்குத் திரும்பிய அமுதனுக்கு மதிய வேளையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துச் செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த மாணவரின் நண்பர் ஸ்ரீமன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆறுமுகன் (20), அரவிந்த் (21), சிவரோகித் (20), மணிபாலு (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மகன் உயிரிழந்த செய்தி கேட்டு அமுதனின் தந்தை கதறி அழுத காட்சி காண்போரைக் கலங்கச் செய்தது. “கல்லூரி பசங்க என் புள்ளைய அடிச்சே கொன்னுட்டாங்க… இனி என் பையன் எனக்குத் திரும்பி வரப்போறதில்ல, என் மகனின் சாவுக்கு நீங்கள்தான் நீதி சொல்லணும்” எனக் கண்ணீருடன் அவர் விடுத்த உருக்கமான வேண்டுகோள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
