LATEST NEWS
வண்டுக்கு ரூ.2 சன்மானம்…! 30 ஆண்டுகளுக்குப் பின் காடுகளுக்கு வந்த பேராபத்து…! சால் மரங்களைக் காக்க வனத்துறை போட்ட ‘ஸ்கெட்ச்’..!!
மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள காடுகளில் ‘சால்’ வகை மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த மரங்களை அரித்து அழித்து வரும் ‘சால் போரர்’ என்ற ஆபத்தான வண்டு இனத்திலிருந்து காடுகளைப் பாதுகாக்க அம்மாநில வனத்துறை ஒரு நூதன திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன்படி, காடுகளைப் பாதிக்கும் இந்த வண்டுகளைப் பிடித்துத் தரும் கிராம மக்களுக்கு, ஒரு பூச்சிக்கு தலா 2 ரூபாய் வீதம் சன்மானம் வழங்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் கவரப்பட்ட கிராம மக்கள், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் காடுகளுக்குச் சென்று வண்டுகளைப் பிடித்து வருகின்றனர். அவ்வாறு பிடிக்கப்படும் பூச்சிகளை 100, 100 பூச்சிகளாக மாலை போல் கோர்த்து, வனத்துறை அமைத்துள்ள சிறப்பு மையங்களில் ஒப்படைத்து அதற்கான பணத்தைப் பெற்றுச் செல்கின்றனர். இதன் மூலம் சால் மரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், உள்ளூர் மக்களுக்கு ஒரு தற்காலிக வருமான வாய்ப்பும் கிடைத்துள்ளது.
வனத்துறை அதிகாரிகளின் தகவல்படி, கடந்த 2026-27 நிதியாண்டில் மட்டும் சுமார் 30,487 ஹெக்டேர் பரப்பளவிலான காடுகளும், 1.47 லட்சம் மரங்களும் இந்த பூச்சிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற பாதிப்பு ஏற்பட்ட போது, லட்சக்கணக்கான மரங்களை வெட்டி அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது மீண்டும் அப்படி ஆகாமல் தடுக்க, ‘ட்ராப் ட்ரீ’ என்ற நவீன நுட்பத்தைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கவர்ந்து அழித்து வருவதோடு, முற்றிலும் பாதிக்கப்பட்ட 1,46,784 மரங்களை வெட்டி அகற்றுவதற்குக் மத்திய அரசிடமும் வனத்துறை அனுமதி கோரியுள்ளது.
