LATEST NEWS
நமக்கு இது கட்டாயமா?”பழுதான ஒரு காரையாவது காட்டுங்க” – எத்தனால் பெட்ரோல் சர்ச்சைக்கு அமைச்சர் நிதின் கட்கரியின் அதிரடி சவால்..!
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் ‘E20’ திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இத்திட்டத்தால் வாகனங்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக எழும் புகார்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக மறுத்துள்ளார். எத்தனால் கலந்த எரிபொருளால் இதுவரை எந்தவொரு காரும் பழுதானதற்கான சிறு ஆதாரமும் இல்லை என்றும், திட்டமிட்டு சிலர் இத்தகைய அவதூறுகளைப் பரப்பி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். அதுமட்டுமின்றி, எத்தனால் உற்பத்திக்காக மக்காச்சோளத்தின் தேவை அதிகரித்துள்ளதால், அதன் சந்தை விலை கடுமையாக உயர்ந்து விவசாயிகளுக்கு பெரும் லாபம் கிடைத்து வருவதாகவும் அவர் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார்.
அரசின் விளக்கம் ஒருபுறம் இருக்க, வாகன ஓட்டிகள் மத்தியில் இந்த E20 பெட்ரோல் பயன்பாடு குறித்து பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன. எத்தனால் வேதிப்பொருள் இயல்பாகவே காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டதால், அது வாகனத்தின் இன்ஜினுக்குள் துருப்பிடித்தலை ஏற்படுத்துவதோடு, மைலேஜ் குறைவு மற்றும் ஓடும்போதே வாகனம் திடீரென நிற்கும் கோளாறுகளை உருவாக்கும் என பயனர்கள் அஞ்சுகின்றனர். 2023-ஆம் ஆண்டிற்குப் பிறகு வந்த புதிய வாகனங்கள் E20 தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டாலும், அதற்கு முன் வாங்கப்பட்ட பழைய வாகனங்களுக்கு இது பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது. இந்த நடைமுறை சிக்கல்கள் காரணமாகவே நமது அண்டை நாடான பூட்டான், இந்தியாவின் எத்தனால் கலந்த பெட்ரோலை இறக்குமதி செய்ய மறுத்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைத்து, காற்று மாசை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு இந்த உயிரி எரிபொருள் திட்டத்தை முன்னெடுக்கிறது. ஆனால், நிபுணர்கள் இதிலிருக்கும் மற்றொரு பெரிய ஆபத்தை எச்சரிக்கின்றனர். எத்தனால் தயாரிப்பிற்காக கரும்பு, மக்காச்சோளம், உடைந்த அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பயிர்கள் பெருமளவில் மடைமாற்றப்படுகின்றன. வருங்காலத்தில் எரிபொருள் தேவைக்காக விவசாய நிலங்கள் அனைத்தும் இதற்காகவே பயன்படுத்தப்பட்டால், அது இந்தியாவில் எதிர்பாராத உணவுப் பற்றாக்குறையையும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதீத விலைவாசி உயர்வையும் ஏற்படுத்திவிடும் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.
