LATEST NEWS
“35 கோடி பேரம்” வழக்கில் திடீர் திருப்பம்.. தவெக வழக்கை தவிடு பொடியாக்கிய செந்தில்பாஜி,அசோக்குமார்.. விஜய் கட்சிக்கு விழுந்த பலத்த அடி..!!
த.வெ.க ஆட்சியைத் தலைகீழாகக் கவிழ்ப்பதற்காக அந்தப் கட்சியின் எம்.எல்.ஏ இளங்கோவிடம் ₹35 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கைதான சிலர், தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படும் நிலையில், தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் இருவருக்கும் திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பினர். அவர்கள் ஆஜராகாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பு வழக்கறிஞர், தி.மு.க-வில் 59 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கும் போது ஆட்சியைத் தங்களால் கவிழ்க்க முடியாது என்றும், கரூரைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களை இதில் இணைப்பது முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையில் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் வாதாடினார்.
மறுபுறம் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ஆட்சியைப் பலவீனப்படுத்தவோ அல்லது கவிழ்க்கவோ சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றும், இதற்குப் பின்னால் ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் வாதாடினார். மேலும், கைதானவர்களுடன் அசோக் குமாருக்குத் தொடர்பு இருப்பதற்கான பல ஆதாரங்கள் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், இறுதியில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகிய இருவருக்கும் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. வரும் 10-ஆம் தேதி த.வெ.க தலைவரும் முதலமைச்சருமான விஜய் கரூருக்குச் செல்வதற்கு முன்பாக இவர்களைக் கைது செய்ய எடுக்கப்பட்ட முயற்சி, இந்த முன்ஜாமீன் உத்தரவின் மூலம் த.வெ.க தரப்பிற்குப் பின்னடைவாக முடிந்துள்ளதாகத் தெரிகிறது.
