LATEST NEWS
“பாம்பின் நிழலில் ஒதுங்கிய தவளை” த.வெ.க அரசை ‘குட்டி ஸ்டோரி’யால் வெளுத்தெடுத்த ஜெயக்குமார்.. இன்னும் ஏன் அதை செய்யல..? முதல்வர் விஜய்க்கு நேரடி கேள்வி..!
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழகத்தில் தற்போதைய த.வெ.க. ஆட்சியில் ஒருபுறம் மின்வெட்டு, மறுபுறம் தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என மக்கள் கடுமையான துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று குற்றம் சாட்டினார். தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்தே லாக்அப் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் போதைப்பொருள் விவகாரங்களில் கைது செய்யப்பட்டால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உடனே விசாரித்து விடுவித்துவிடுகிறார்கள் என்று ஜெயக்குமார் சாடினார். ஆனால், நாகர்கோவிலில் வெறும் 200 கிராம் குட்கா வைத்திருந்த காரணத்திற்காக, சிறை காவலர்களால் சபரிவர்மன் அடித்தே கொல்லப்பட்டுள்ளார் என்று சுட்டிக்காட்டி தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த நிலையும் இப்படி மோசமாக இருக்கும் சூழலில், தமிழக முதல்வர் விஜய் இதுவரை ஏதேனும் ஒரு பிரச்சினைக்காகவாவது பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறாரா என்று அவர் கேள்வி எழுப்பினார். இதையெல்லாம் பார்க்கும்போது தமிழகத்தில் ஒரு அரசு செயல்படுகிறதா என்றே தெரியவில்லை என்றும், மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் அடிப்படை வசதிகளுக்கான டெண்டர்கள் கூட இன்னும் விடப்படவில்லை என்றும் தூக்கத்தில் இருக்கும் த.வெ.க. அரசைச் சாடினார்.
இறுதியாக, வெயிலின் கொடுமை தாங்க முடியாத தவளை ஒன்று, படம் எடுத்து ஆடிய பாம்பின் நிழலில் போய் ஒதுங்கிய கதையைக் குறிப்பிட்ட ஜெயக்குமார், அதுபோலத்தான் தற்போதைய தமிழக மக்களின் பரிதாப நிலை உள்ளது என்று ஒரு குட்டி ஸ்டோரியுடன் தனது பேட்டியை நிறைவு செய்தார்.
