LATEST NEWS
“மாணவர்கள் உயிருக்கு பாதுகாப்பே இல்லையா…?”டெல்லி மாணவர் விடுதி திடீரென இடிந்து ஒருவர் பரிதாப பலி… 3 பேர் நிலைமை கவலைக்கிடம்… பிரதமர் இதற்கு பதில் சொல்வாரா…? கொந்தளிக்கும் அபிஜித் தீப்கே..!!
டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள ‘ஹாஸ்டல் டேஸ்’ என்ற 5 மாடி தனியார் பிஜி விடுதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் உள்ள இந்த விடுதியில் தங்கியிருந்த சுமார் 50 மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் டெல்லி தீயணைப்புத் துறை இணைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இதுவரை ஒரு உயிரழப்பு பதிவாகியுள்ளது. மேலும் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
சுமார் 20 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிஜேபி (கரப்பான்பூச்சி ஜனதா கட்சி) நிறுவனர் அபிஜித் தீப்கே பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “நேற்று பிரதமர் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு வந்து அரசியல் உரையாற்றிவிட்டுச் சென்றார், ஆனால் நமது கல்வி உள்கட்டமைப்பின் நிலை குறித்து மிகக் குறைவாகவே பேசினார். இன்று விடுதி கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சீரழிந்து வரும் உள்கட்டமைப்பு மற்றும் அரசின் அலட்சியப் போக்கிற்கு இந்த நாட்டின் மாணவர்கள் இன்னும் எவ்வளவு காலம் விலைகொடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ள அபிஜித் தீப்கே, மாணவர்களுக்குப் பாதுகாப்பான வகுப்பறைகளும், விடுதிகளும், அடிப்படை கண்ணியமும் தேவை எனக் கூறியுள்ளார். மேலும், பிரதமர் மீண்டும் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு வந்து இது எவ்வாறு நடந்தது என்று விளக்கம் அளிப்பாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
