CINEMA
ஆட்சி அமைத்த விஜய்.. ஆனா ‘அவங்க’ வரலையே…!குடும்பத்தில் வெடித்த புதிய சர்ச்சை…!மனைவி, பிள்ளைகள் தான் முக்கியம்!” – முதலமைச்சர் விஜய்க்கு சமுத்திரக்கனி கொடுத்த எமோஷனல் அட்வைஸ்…!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக அல்லாத கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து, கடந்த 10ஆம் தேதி தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்ற அவரது பதவியேற்பு விழா நாடு முழுவதும் பெரும் பேசுபொருளானது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழா குறித்து சில முக்கியமான விமர்சனங்களையும், உருக்கமான கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசிய சமுத்திரக்கனி, தேர்தலில் கட்சிகள் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்வதைச் சுட்டிக்காட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். “நேற்றுகூட மதுரையில் பேசும்போது 150 கோடிகள் தேர்தல் செலவு செய்தது குறித்துப் பேசினோம். 150 கோடிகளை எதற்காகச் செலவு செய்கிறார்கள், பின்னாளில் 1500 கோடிகளை எடுப்பதற்குத்தானே? இந்தத் தேர்தலில் சில கட்சிகள் சல்லடையாகிக் காணாமல் போய்விட்டன” என்று தேர்தல் அரசியலின் நிதர்சனத்தை விமர்சித்தார்.
“பதவியேற்பு விழாவை நானும் டிவியில் பார்த்தேன். முதல் வரிசையில் ஒரு மூன்று பேர் மிஸ்ஸிங், அது எனக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது. உங்களை வீழ்த்த நினைத்தவர்கள் வீட்டிற்கே சென்று, அன்பு செலுத்திய பண்பாளர் நீங்கள். அந்த மூன்று பேரை விட்டுவிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இன்னமும் இருக்கிறது, தலைவா விட்டிடாதீங்க!”
சமுத்திரக்கனி தனது பேச்சில் குறிப்பிட்ட அந்த ‘மூன்று பேர்’, முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா, மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா தான் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கூறி வருகின்றனர். விஜய்யின் அரசியல் பயணத்திலோ அல்லது அவரது பதவியேற்பு விழாவிலோ அவரது குடும்பத்தினர் குடும்பமாகப் பங்கெடுக்காதது குறித்துத்தான் சமுத்திரக்கனி இவ்வாறு மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
தொடர்ந்து பேசிய சமுத்திரக்கனி, “ஏனென்றால் பல கோடி இளைஞர்கள் உங்கள் பின்னால் வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் குடும்பம்தான் மிகவும் முக்கியமானது என்ற எண்ணமும், மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் மீது ஒரு பிடிப்பும் வர வேண்டும். அதை ஒரு தலைவராக நீங்கள் உருவாக்க வேண்டும்” என்று விஜய்க்கு வேண்டுகோள் விடுத்தார். சமுத்திரக்கனியின் இந்த எமோஷனல் பேச்சு தற்போது இணையத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
