CINEMA
தனித்து வாழும் தைரியம் இருக்கா…!திருமணம் செய்யாதவர்கள் மகிழ்ச்சியாக இல்லையா…!கல்யாண வயதைக் கடந்து தவிக்கும் பெண்களுக்கு ஆண்ட்ரியா கொடுத்த ‘தக் லைஃப்’ தைரியம்…!
தமிழ் திரையுலகில் பாடகியாகத் தன் பயணத்தைத் தொடங்கி, பின்னர் தனது தேர்ந்த நடிப்பால் முன்னணி நடிகையாக முத்திரை பதித்தவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. தற்போது ‘அரசன்’, ‘சர்தார் 2’, ‘மனுஷ்’, ‘நோ என்ட்ரி’, ‘பிசாசு 2’ எனப் பல முக்கியத் திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று பிஸியாக நடித்து வருகிறார். திரையில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் எப்போதுமே துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் பேசக்கூடிய ஆண்ட்ரியா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
அந்தப் பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசிய ஆண்ட்ரியா, “நான் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறேன், அதுவே எனக்குப் போதும். ‘திருமணம் ஆகவில்லை என்பதற்காக ஒருவருடைய வாழ்க்கை முழுமையற்றதாகிவிட முடியாது’ என்று அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கு 30 வயது கடந்த காலகட்டத்தில், ‘இன்னும் திருமணம் ஆகவில்லையே’ என்ற சமூக ரீதியான பயமும், அழுத்தமும் இருந்ததாகவும், அதற்காகச் சில மாப்பிள்ளைகளைச் சந்தித்துப் பேசியதாகவும் அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வாழ்க்கையைத் தான் முற்றிலும் வேறு கோணத்தில் புரிந்து கொண்டதாக ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொண்டவர்கள் எல்லாரும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது; அதே நேரத்தில் திருமணம் செய்து கொள்ளாதவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றும் கூற முடியாது என்ற எதார்த்தத்தை உடைத்துப் பேசியுள்ளார். வாழ்க்கையில் சில விஷயங்களைக் கட்டாயப்படுத்திச் செய்யக் கூடாது என்றும், அதற்கான நேரம் வரும்போது அது தானாகவே நடக்கும் என்றும் திருமண பந்தம் குறித்த தனது முதிர்ச்சியான பார்வையைப் பதிவு செய்துள்ளார்.
ஆண்ட்ரியாவின் இந்தத் துணிச்சலான பேச்சு, குறிப்பாகத் திருமண வயதைக் கடந்து சமூக அழுத்தங்களைச் சந்தித்து வரும் பல பெண்களுக்குப் பெரும் தைரியத்தையும் வரவேற்பையும் பெற்றுத் தந்துள்ளது. ஒருபுறம் பெண்களின் சுதந்திரமான முடிவுக்கு இது ஆதரவாக அமைகிறது எனப் பாராட்டுகள் குவிய, மறுபுறம் அவரது தன்னிச்சையான வாழ்க்கை முறைக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோருடன் ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள ‘அரசன்’ திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாகக் காத்துக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
