CINEMA
எத்தனையோ குருவி இருக்க…தரைக்கே வராத அந்த ஒரு பறவை…பொருந்தாக் காதலின் பெருவலி! விக்ரம் – ஐஸ்வர்யா ராய் நடித்த ‘உசுரே போகுதே’ பாடலின் வரிகளுக்குள் இருக்கும் விநோத அர்த்தம்…!
தமிழ் திரையுலகில் மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் – வைரமுத்து ஆகிய மூவர் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்துமே காலத்தைக் கடந்து ரசிக்கப்படுபவை. அந்த வகையில், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ராவணன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உசுரே போகுதே’ பாடல் வைரமுத்துவின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல் ஆகும். பாடகர் கார்த்திக்கின் காந்தக் குரலில், நடிகர் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பில் உருவான இப்பாடல், ஒரு பொருந்தாக் காதலைப் பற்றிப் பேசுகிறது. காதலின் ஆழத்தையும் சொல்ல வேண்டும், அதே நேரத்தில் ஒழுக்க மீறலையும் நியாயப்படுத்திவிடக் கூடாது என்ற இக்கட்டான சூழலை வைரமுத்து தன் வரிகளால் மிக நுட்பமாகச் செதுக்கியிருப்பார்.
இந்தக் காதலின் பிரிவையும், அதன் வலியையும் வெளிப்படுத்தும் விதமாகப் பாடலில், “தகைவிலான் குருவி என்னை தள்ளி நின்னு சிரிக்குதடி…” என்ற ஒரு வரி இடம்பெற்றிருக்கும். உலகத்தில் எத்தனையோ பறவைகள் இருக்க, கவிஞர் வைரமுத்து ஏன் குறிப்பாக இந்த ‘தகைவிலான் குருவி’யைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான இயற்கை ரகசியம் ஒளிந்துள்ளது. ‘தகைவிலான் குருவி’ (Barn Swallow) என்ற ஒரு குறிப்பிட்ட வகைப் பறவை, பெரும்பாலும் தரைக்கு வராமல் எப்போதும் வானத்திலேயே பறந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு அரிய இயல்பைக் கொண்டதாகும்.
பூமியில் இருக்கும் நாயகனுக்கும், வானத்தில் எட்டாத உயரத்தில் பறக்கும் அந்தப் பறவைக்கும் இடையே உள்ள தூரத்தைப் போல, காதலி தனக்கு எட்டாத தொலைவில் இருக்கிறாள் என்பதை உணர்த்தவே வைரமுத்து இந்த உவமையைப் பயன்படுத்தியுள்ளார். “நீ என்னை விட்டு மிகவும் தூரத்தில் இருக்கிறாய், நமக்குள் இருக்கும் இடைவெளி அவ்வளவு பெரியது” என்ற காதலின் பெருவலியை, இயற்கையோடு ஒப்பிட்டு அவர் கையாண்ட விதம் அபாரமானது. இந்த ஒரு வரியின் மூலம், பாடலின் ஆழத்தையும் நாயகனின் தவிப்பையும் ரசிப்பவர்களின் மனதில் கடத்துவதில் கவிப்பேரரசு வைரமுத்து மீண்டும் ஒருமுறை முத்திரை பதித்துள்ளார்.
