LATEST NEWS
நீங்க சொன்னதை செய்யவே ரூ.1 லட்சம் கோடி வேணும்…! அதுக்காக தான் வெள்ளை அறிக்கையா…? அடுத்த செயல்திட்டம் தான் என்ன…? த.வெ.க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி…!!
தமிழக அரசின் புதிய வெள்ளை அறிக்கையின்படி, மாநிலத்தின் நேரடிக் கடன் 10 லட்சம் கோடியாகவும், இதர பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்தால் ஒட்டுமொத்தப் பொறுப்பு 13.18 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் நிலவிய நிதிச் சீரழிவுகள் குறித்துத் தங்களது பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே கணித்து வெளியிட்ட உத்தேசத் தரவுகளே தற்பொழுது வெள்ளை அறிக்கையில் உண்மையாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகப் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசு பொறுப்பேற்றவுடன் இத்தகைய நிதிநிலை விபரங்களை வெளியிட்ட ஆரோக்கியமான போக்கை வரவேற்கும் அதே வேளையில், இந்த நிதி நெருக்கடியைத் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தட்டிக்கழிப்பதற்கான ஒரு சாக்காகப் புதிய அரசு பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் விகிதம் 5.45 விழுக்காடாகக் குறைந்துள்ளதற்கும், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒரு ரூபாய் கூட ஜி.எஸ்.டி வரி செலுத்தாமல் இருப்பதற்கும் உரிய காரணங்களை ஆராய்ந்து புதிய அரசு வரி வசூலை முறைப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், பழைய கடன்களுக்கான வட்டி, அரசு ஊழியர் ஊதியம் மற்றும் தற்போதைய மானியச் செலவுகளுடன் த.வெ.க-வின் புதிய வாக்குறுதிகளையும் அமல்படுத்த வேண்டுமானால், நடப்பு நிதியாண்டில் மட்டும் அரசு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வரை கூடுதல் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அவர் கணக்கிட்டுள்ளார். இவ்வளவு பெரிய தொகையைக் கடன் வாங்க அரசிடம் உள்ள காலவரையறையுடன் கூடிய மாற்றுச் செயல்திட்டம் என்ன என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
