LATEST NEWS
“என்னை உங்களோடு கூட்டி செல்லுங்கள் அப்பா…” பள்ளிக்கு வந்த தந்தையிடம் கதறிய சிறுவன்…. கள்ளக்காதலனுடன் தாய் செய்த கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!
கோவை சாய்பாபாகாலனி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த திவ்யா (32) என்ற பெண், தனது கணவரைப் பிரிந்து அபிஷேக் (6) என்ற மகனுடனும், மூன்று வயது மகளுடனும் தனியாக வாழ்ந்து வந்தார். அட்டைப்பெட்டி தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜதுரை (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
திவ்யாவின் இல்லத்திற்கு அடிக்கடி வந்து சென்ற ராஜதுரையுடன் தனிமையில் இருப்பதற்கு இந்த இரண்டு குழந்தைகளும் தடையாக இருப்பதாக இருவரும் கருதியுள்ளனர். இதன் காரணமாக, அந்தப் பிஞ்சுக் குழந்தைகளை இருவரும் தொடர்ந்து மிகக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளனர். ஒருமுறை பள்ளிக்கு வந்த தனது தந்தையிடம், அம்மாவும் மாமாவும் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதால் தன்னுடனேயே அழைத்துச் செல்லுமாறு சிறுவன் அபிஷேக் கதறி அழுதுள்ளான்.
இதற்கிடையே கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று, கடை வீதிக்கு அருகில் வைத்து சிறுவனை ராஜதுரையும் திவ்யாவும் குச்சியால் கொடூரமாகத் தாக்கியதை அக்கம் பக்கத்தினர் கண்டித்துள்ளனர். அன்றைய தினமே பலத்த காயங்களுடன் மயங்கி விழுந்த சிறுவனை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவன் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இக்கோரக் கொலை குறித்துச் சாய்பாபாகாலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து, திவ்யா மற்றும் அவரது கள்ளக்காதலனைக் கைது செய்தனர். வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில், இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பளித்துள்ளார்; இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வருகிற ஜூன் 22-ஆம் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
