CINEMA
ஒரே அப்பார்ட்மெண்ட்.. எதிர் எதிர் வீடு…விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணமா?…மினி விஜயகாந்த் சரவணன் மீது முதல் மனைவி சூர்யஸ்ரீ அடுக்கடுக்கான குற்றச்சாட்டு…!
90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சரவணன். ‘வைதேகி வந்தாச்சு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் முகச்சாயலைக் கொண்டிருந்ததால் ‘மினி விஜயகாந்த்தாகவே’ ரசிகர்களால் பார்க்கப்பட்டார். தொடர் வெற்றிகளுக்குப் பிறகு திரைத்துறையில் சற்று தொய்வைக் கண்ட இவர், அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் ‘சித்தப்பு’ கேரக்டரில் நடித்து திரையுலகில் மிரட்டலான ரீ-என்ட்ரி கொடுத்தார். அண்மையில் வெளியான ‘வித் லவ்’ திரைப்படத்தில் செய்யாத குற்றத்திற்காகப் பழி சுமக்கும் வாத்தியார் பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை உருக வைத்த சரவணன், தற்போது ‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
திரைவாழ்வில் மீண்டும் நல்லதொரு வளர்ச்சி ஏற்பட்டு வரும் இந்நேரத்தில், சரவணனின் தனிப்பட்ட வாழ்க்கை அவருக்குப் பெரும் பரபரப்பையும் சட்டச் சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சரவணனுக்கு மொத்தம் இரண்டு திருமணங்கள் நடந்துள்ளன. கடந்த 2003-ம் ஆண்டு சூர்யஸ்ரீ என்ற பெண்ணை முதலாவதாகத் திருமணம் செய்த அவர், விவாகரத்து பெறாமலேயே 2019-ல் ஸ்ரீதேவி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். தற்போதைய சூழலில், மவுலிவாக்கத்தில் உள்ள ஒரே அடுக்குமாடி குடியிருப்பில், ஒரு வீட்டில் இரண்டாவது மனைவியுடனும், அதற்கு எதிர்த்த வீட்டில் முதல் மனைவியுடனும் சரவணன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சரவணனின் முதல் மனைவி சூர்யஸ்ரீ, அவர் மீது மீண்டும் ஒரு பரபரப்பான புகாரை காவல் துறையில் அளித்துள்ளார். ஏற்கனவே தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகச் சில மாதங்களுக்கு முன் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது, “தங்கள் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை நடிகர் சரவணன் ஆட்களை வைத்து அகற்றிவிட்டதாகவும், இதனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும்” சூர்யஸ்ரீ புதிய புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கும் தனது உடைமைகளுக்கும் ஏதேனும் நேர்ந்தால் அதற்கு சரவணனே பொறுப்பு என்றும், நீதிமன்ற உத்தரவுப்படி தனக்கு வழங்க வேண்டிய ஜீவனாம்சம் மற்றும் விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்தது குறித்தும் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
