LifeStyle
ATM-க்கு போறீங்களா…? இந்த 10 தப்புகளை மட்டும் செஞ்சிடாதீங்க… உங்க பணத்தை பத்திரமாக பாதுகாக்க சிம்பிள் டிப்ஸ்…!!
இன்றைய காலகட்டத்தில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது அத்தியாவசிய தேவையாக மாறிவிட்ட நிலையில், அதற்கேற்ப அதிநவீன ஆன்லைன் மோசடிகளும் உலகளவில் அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றவாளிகள் ஏடிஎம் இயந்திரங்களின் கார்டு செருகும் பகுதியில் அசல் போன்றே தோற்றமளிக்கும் போலி பிளாஸ்டிக் உறையை பொருத்தி தகவல்களைத் திருடுகின்றனர்.
மேலும், புளூடூத் ஸ்கிம்மர் கருவிகள், பின் எண்களைக் கண்காணிக்கும் ரகசியக் கேமராக்கள் மற்றும் விசைப்பலகையின் மேல் வைக்கப்படும் போலி அடுக்குகள் மூலமாக வாடிக்கையாளர்களின் ரகசிய எண்களைக் கொள்ளையடிக்கின்றனர். இதுமட்டுமின்றி, அசல் இயந்திரத்தின் மீது பழுதுபார்ப்பு அறிவிப்பை ஒட்டிவிட்டு, அதற்கு அருகிலேயே போலி ஏடிஎம் இயந்திரங்களை நிறுவி ஏமாற்றும் புதிய மோசடி முறையையும் தற்போது கையாண்டு வருகின்றனர்.
இத்தகைய நூதனத் திருட்டுகளில் இருந்து தப்பிக்கப் பொதுமக்கள் ஏடிஎம் மையங்களைப் பயன்படுத்தும்போது சில முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். கார்டைச் செருகுவதற்கு முன்பாக அதன் ஸ்லாட் மற்றும் கீபேட் ஆகியவை தளர்வாக உள்ளதா என்று தொட்டுப் பார்த்து உறுதி செய்வதும், பின் எண்ணை அழுத்தும்போது கைகளாலும் உடலாலும் விசைப்பலகையை முழுமையாக மறைப்பதும் அவசியமாகும்.
கார்டு அல்லது பணம் ஏடிஎம் இயந்திரத்திற்குள் சிக்கிக்கொள்ளும் ‘ட்ராப்பிங்’ மோசடி நடந்தால், உடனடியாக இடத்தை விட்டு நகராமல் வங்கியின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை மையத்தை அட்டைக்கு பின்புறம் உள்ள எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். திரையில் தோன்றும் போலி எண்களையோ அல்லது வங்கி ஊழியர் போலப் பேசும் மர்ம நபர்களையோ நம்பி ஓடிபி (OTP), சிவிவி (CVV) போன்ற எவ்வித ரகசியத் தரவுகளையும் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
