LATEST NEWS
உஜ்ஜைன் அதிர்ச்சி…! பிள்ளைகளின் சொத்துரிமை கேட்கச் சென்ற தாய்க்கு நேர்ந்த கொடூரம்…! தலைமுடி வெட்டப்பட்டு சித்திரவதை… 6 பேர் கைது..!!!
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஜார்டா காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில், பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அமானுஷ்யமான அநீதி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் கணவரைப் பிரிந்து, வேறொரு நபருடன் இந்தூரில் வசித்து வந்த 30 வயதுப் பெண், கடந்த ஜூன் 30 அன்று தனது முதல் கணவருக்குப் பிறந்த இரு குழந்தைகளின் சொத்து உரிமையைக் கேட்பதற்காக, தனது முன்னாள் மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது.
சொத்துரிமை கேட்க வந்த அந்தப் பெண்ணையும், அவருடன் வந்த அவரது இரண்டாவது கணவரையும் முன்னாள் கணவரின் குடும்பத்தினரும் சில கிராம மக்களும் சேர்ந்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அந்தப் பெண்ணின் தலைமுடியை வெட்டி, ஆடைகளைக் கிழித்து, இருவருக்கும் செருப்பு மாலை அணிவித்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்தியுள்ளனர். இந்தச் சித்திரவதையை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியதை அடுத்து, இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இணையத்தில் பரவிய வீடியோவை ஆதாரமாகக் கொண்டு உடனடியாகச் செயல்பட்ட உஜ்ஜைன் காவல்துறை, இச்சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் சுமேர் சிங், பத்ரிலால், கச்ரு சிங், தசரத் சிங், வீரேந்திர சிங் மற்றும் கிருபால் சிங் ஆகிய 6 முக்கியப் குற்றவாளிகளைப் போலீஸார் இதுவரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் தீவிரமாகத் தேடி வருவதாகவும், தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
