LATEST NEWS
பாடம் நடத்த சொன்னா வெளிய போங்க…! தட்டிக்கேட்ட பெற்றோரின் குழந்தைகளை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய ஆசிரியை… அதிர்ச்சி வீடியோ..!!
மத்திய பிரதேச மாநிலம் சியோபூர் மாவட்டத்தில் உள்ள மதாசுலா என்ற கிராமத்தில் இருக்கும் ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெற்றோர் தனது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான சேர்க்கை பணிக்காக அந்த பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது வகுப்பறையில் எந்த ஆசிரியரும் இல்லாமல், மாணவர்கள் தனியாக அமர்ந்திருப்பதை அவர் கவனித்துள்ளார். மேலும், அங்குள்ள ஆசிரியை ஒருவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல், வகுப்பறைக்குள் அமர்ந்து கொண்டு வெள்ளரிக்காய்களை சாப்பிட்டுக் கொண்டும், ஒரு குழந்தைக்கு ஊட்டிக் கொண்டும் பொழுதைக் கழித்ததாகக் கூறப்படுகிறது.
பாடம் நடத்தாமல் ஆசிரியை அலட்சியமாக இருந்ததை அந்த பெற்றோர் தட்டிக்கேட்டதுடன், தனது குழந்தையை பள்ளியில் சேர்க்கும்படியும் கேட்டுள்ளார். ஆனால், அந்த ஆசிரியை குழந்தையை சேர்க்க மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த பெற்றோர், தன் மொபைல் போனை எடுத்து அங்கு நடப்பதை வீடியோவாகப் பதிவு செய்யத் தொடங்கினார். வீடியோவில் அவர், “இங்க பாருங்க, மேடம் குழந்தைகளை வகுப்பை விட்டு வெளியே துரத்துறாங்க. இவங்க சரியா பாடம் நடத்துறதும் இல்ல, சும்மா உட்கார்ந்து வெள்ளரிக்காய் சாப்பிட்டுட்டு இருக்காங்க” என்று கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியை, ஒரு சிறுவன் மற்றும் சிறுமியை வகுப்பறையை விட்டு வெளியே பிடித்துத் தள்ளியதோடு, “நான் இவர்களுக்கு பாடம் நடத்த மாட்டேன், இனிமேல் இவர்களை பள்ளிக்கு அழைத்து வராதீர்கள்” என்று கத்தியுள்ளார். பின்னர், நிலைமை மோசமாவதை உணர்ந்து ஆங்கிலப் பாடம் நடத்துவது போல் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்த முழு சம்பவமும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், வீடியோவின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்ட பிறகு, தவறு செய்த ஆசிரியை மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
