LATEST NEWS
மகனின் சடலம் எனக்கு வேண்டாம்..! அவனுக்குச் சரியான தண்டனை கிடைத்துள்ளது!” பாருய்பூர் என்கவுண்டர் குறித்து தாய் உருக்கம்..!!
மேற்கு வங்க மாநிலம் பாருய்பூரில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான பிரபாஸ் மொண்டல், காவல்துறையினரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றக் காட்சியை மறுவடிவமைப்பு செய்ய அவரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றபோது, காவல்துறையினரின் துப்பாக்கியைப் பறித்துச் சுட்டுவிட்டு தப்பியோட முயன்றதால், தற்காப்பிற்காக காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகப் பாருய்பூர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இந்த என்கவுண்டர் மரணத்தைத் தொடர்ந்து, பிரபாஸ் மொண்டலின் தாய் சந்தியா மொண்டல் தனது மகனின் உடலை வாங்க முற்றிலும் மறுத்துவிட்டார். காவல்துறையினர் இந்தத் தகவலை அவரிடம் தெரிவித்தபோது, மருத்துவமனைக்கு வரவும் அவர் மறுத்துவிட்டார். “என் மகன் செய்த கொடுமையான குற்றத்திற்கு அவனுக்குச் சரியான தண்டனை கிடைத்துள்ளது; அவன் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை” என்று அவர் ஊடகங்களிடம் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
ஒரு தாயாக மகனின் மரணம் தனக்கு வேதனை அளித்தாலும், அவன் செய்த தவறுக்கான தண்டனையை அவன் அனுபவித்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், மகனின் உடலைத் தனது வீட்டிற்கு எடுத்து வரப்போவதில்லை என்று கூறினார். மேலும், “அவன் ஒரு பெண்ணின் வலியைப் புரிந்துகொள்ளவில்லை, அவனது உடலை வைத்து காவல்துறை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், அதற்கு எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்றும் அவர் மிக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
