LATEST NEWS
“ஸ்ரீ கிருஷ்ணரை போல”.. நாசிக் மதமாற்ற வழக்கு.. 5 மாத கர்ப்பிணிக்கு ஜாமீன்.. ஆனா ஒரு கண்டிஷன்.. நீதிபதி கொடுத்த நெகிழ்ச்சியான தீர்ப்பு..!!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில், பெண் ஊழியர்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகவும், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் எழுந்த புகாரின் பேரில் நாசிக் போலீஸார் 9 எப்ஐஆர்களைப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கின் 8 குற்றவாளிகளில் ஒருவரான நிதா கான், சக பெண் ஊழியருக்குப் புர்கா மற்றும் இஸ்லாமிய மதப் புத்தகங்களை வழங்கியதோடு, மொபைலில் மதச் செயலிகளை நிறுவச் செய்து தொழுகை செய்யக் கட்டாயப்படுத்தியதாகக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின் 42 நாட்கள் தலைமறைவாக இருந்த நிதா கான் கடந்த மே 7 அன்று கைது செய்யப்பட்ட நிலையில், தான் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதால் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நாசிக் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.ஜி. ஜோஷி, நிதா கானின் கர்ப்பம் மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ₹75,000 பிணைத் தொகையுடன் கூடிய நிபந்தனை ஜாமீனை நாசிக் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.ஜி. ஜோஷி வழங்கியுள்ளார். ஸ்ரீ கிருஷ்ணரைப் போல சிறையில் குழந்தை பிறப்பதையும், அதனால் பிற்காலத்தில் அக்குழந்தை சந்திக்க நேரிடும் சமூக அவமதிப்பையும் ஏற்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, குழந்தையின் நல்வாழ்விற்காகவே இந்த ஜாமீனை வழங்குவதாகத் தெரிவித்தார். அதே வேளையில், நிதா கான் பாதிக்கப்பட்ட பெண்ணையோ அல்லது சாட்சிகளையோ மிரட்டக் கூடாது என்றும், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லாமல் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
