LATEST NEWS
“சொந்த வீட்டிலேயே 12 வயது சிறுமி பாறாங்கல்லால் அடித்துக் கொலை..! ஆடைகளின்றி இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு… பாலியல் அத்துமீறலா என தீவிர விசாரணை..!”
மகாராஷ்டிர மாநிலம் வர்தா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், கடந்த புதன்கிழமை மாலை 12 வயது சிறுமி ஒருவர் அவரது வீட்டிலேயே பாறாங்கல்லால் அடித்துக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். கொலை செய்யப்படுவதற்கு முன்பு அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் பலத்த சந்தேகம் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் பாறாங்கல் ஒன்றைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா-இன் கீழ் கொலை, கற்பழிப்பு, பாலியல் வன்முறை, அத்துமீறி வீட்டிற்குள் நுழைதல் ஆகிய பிரிவுகளுடனும், போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தை முழுமையாக உறுதி செய்வதற்காகப் பிரேதப் பரிசோதனை மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் குறித்து வர்தா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சௌரப் குமார் அகர்வால் தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்டமாகச் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரைப் பிடித்து விசாரித்த காவல்துறையினர், தற்போது ராகுல் ராஜு மாதவி என்ற விவசாயத் தொழிலாளியைக் கைது செய்துள்ளனர். இவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள நிலத்தில் வேலை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
