LATEST NEWS
உயிரைப் பறித்த தார் கார்… சடலத்தை விபத்து நடந்த இடத்திலேயே வீசிச் சென்ற ஓட்டுநர்..! விபத்தின் பகீர் பின்னணி..!!!
குரு கிராம் செக்டார் 67-ல் உள்ள அன்சால் வெர்சாலியா அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், பெண் ஒருவர் ஓட்டி வந்த தார் வாகனம் ஏறி வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் பலியானவர் உத்தரப் பிரதேசத்தின் மஹோபா பகுதியைச் சேர்ந்த 57 வயதான குட்டி என்ற பெண்மணி ஆவார். அவர் அந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 1:55 மணியளவில், அந்த குடியிருப்பு வளாகத்தின் வாகன நிறுத்தத்தில் ஒரு தூணின் அருகே குட்டி தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிவப்பு நிற தார் வாகனத்தை ஓட்டி வந்த பெண், எதிர்பாராதவிதமாக அவர் மீது வாகனத்தை ஏற்றியுள்ளார். பின்னர் காரை பின்னோக்கி எடுத்து நிறுத்திவிட்டு, என்ன நடந்தது என்று பார்க்க அந்த ஓட்டுநர் இறங்கியுள்ளார். விபத்து நடந்தவுடன் குட்டியை மற்றொரு வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு, அவரது உடல் மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காரோட்டியின் வீட்டின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த குரு கிராம் செக்டார் 65 காவல்துறை அதிகாரிகள் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருவதாகப் போலீசார் தரப்பில் கூறப்பட்ட நிலையில், இந்த வழக்கில் தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த குட்டியின் குடும்பத்தினர் கார் உரிமையாளர் மீது எவ்வித புகாரும் அளிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். இரு குடும்பங்களுக்கும் இடையே இழப்பீடு தொகைக் குறித்து சுமூக உடன்பாடு எட்டப்பட்டதால், இந்த சம்பவம் தொடர்பாகப் போலீசில் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
