LATEST NEWS
“சீன ஆண்களே.. அங்க போகாதீங்க.. விலைக்கு வாங்காதீங்க!”.. தூதரகம் விடுத்த அதிரடி எச்சரிக்கை.. பின்னணியில் உள்ள பகீர் பின்னணி..!!
சீனாவில் நிலவி வரும் கடுமையான பாலின விகித சமமின்மை காரணமாக, திருமண வயதில் உள்ள கோடிக்கணக்கான ஆண்கள் தங்களுக்குத் துணையைத் தேட முடியாமல் தவித்து வருகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அங்கு ஆண்களை விடப் பெண்கள் இரண்டு கோடி குறைவாக உள்ளனர். இதனால், சீன ஆண்கள் பலர் வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாட்டுப் பெண்களைப் பணம் கொடுத்துத் திருமணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான யுவான்களை அவர்கள் செலவு செய்தாலும், அவ்வாறு வரும் வெளிநாட்டுப் பெண்களில் பலர் திருமணத்திற்குப் பிறகு பணத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவதால் சீன ஆண்கள் பெருமளவில் ஏமாற்றப்பட்டுப் பாதிக்கப்படுகின்றனர்.
இத்தகைய சர்வதேச திருமண மோசடிகள் மற்றும் ஆள்கடத்தல் குற்றங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் உள்ள சீன தூதரகம் ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், திருமணங்கள் பரஸ்பர அன்பு மற்றும் ஒப்புதலின் அடிப்படையில் மட்டுமே நடக்க வேண்டும் என்றும், மணப்பெண்களைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மணப்பெண்களை விலைக்கு வாங்குவது பணப் பறிப்பு மற்றும் உடல் ரீதியான ஆபத்துகளுக்கே வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டுள்ள சீன அரசு, இந்த எல்லை தாண்டிய திருமண மோசடிகளைக் கட்டுப்படுத்த தற்போது தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
