LATEST NEWS
“எஃப்.ஐ.ஆர் முதல் வாய்மொழி வரை… இனி அந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது”.. போலீசாருக்கு அரசு அதிரடி தடை உத்தரவு..!!
ராஜஸ்தானில் உள்ள காவல் துறையினர், தங்களது எழுத்துப்பூர்வமான பதிவுகள் மற்றும் பேச்சுகளில் ‘தலித்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை உடனடியாகத் தவிர்க்க வேண்டும் என்று அம்மாநில காவல்துறை சார்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, இந்திய அரசியலமைப்பில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ‘பட்டியல் சாதி’ என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும் என்று தனது அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் காவல்துறை தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த அதிரடி உத்தரவின்படி, இனி அதிகாரப்பூர்வ அரசுத் தொடர்புகளின்போது ‘தலித்’ என்ற வார்த்தையைப் பேசவோ அல்லது எழுதவோ கூடாது என்று கறாராகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, காவல் நிலையங்களில் பதியப்படும் முதல் தகவல் அறிக்கைகள், புகார்கள், குற்றப்பத்திரிகைகள், கைது குறிப்புகள் மற்றும் காவலில் வைப்பது தொடர்பான ஆவணங்களில் இனி இந்த வார்த்தை இடம் பெறாது. மேலும் வழக்கு நாட்குறிப்புகள், வழக்கு முடிப்பு அறிக்கைகள், படிவங்கள், விண்ணப்பங்கள், சான்றிதழ்கள் மற்றும் அனைத்து விதமான அதிகாரப்பூர்வ கடிதப் பரிமாற்றங்களிலும் ‘தலித்’ என்ற சொல் முற்றிலும் தவிர்க்கப்படும். ராஜஸ்தான் முழுவதிலும் உள்ள அனைத்துக் காவல்துறைத் தலைமை இயக்குநர்கள், காவல் ஆணையர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு நகல் அனுப்பப்பட்டு, இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
