LATEST NEWS
“புகைக்குப் பதிலா தண்ணீர்தான் வரும்..! இந்தியாவின் முதல் ‘மேஜிக்’ ஹைட்ரஜன் ரயில்..!!!”
இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். ஹரியானா மாநிலத்தின் ‘ஜின்’ ரயில் நிலையத்திலிருந்து ‘சோனிபட்’ வரை இந்த பசுமை ரயில் இயக்கப்படுகிறது. இந்தச் சிறப்புமிக்க தொடக்க விழாவில் ஹரியானா மாநில முதலமைச்சர் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த ரயிலின் முதல் பயணத்தில் பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் உற்சாகமாகப் பயணம் செய்தனர்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஹைட்ரஜன் ரயில், சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக விளங்கும் டீசல் இன்ஜின்களுக்கு மாற்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ‘ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள்’ மூலம் ரயிலுக்குள்ளேயே மின்சாரத்தை உற்பத்தி செய்து இயங்குகிறது. இதனால், வழக்கமான ரயில்களைப் போல நச்சுப் புகையோ அல்லது காற்று மாசோ ஏற்படாது. இந்த ரயில் இயங்கும்போது கழிவாக ‘நீரும் நீராவியும்’ மட்டுமே வெளியேறுவதால், இது முற்றிலும் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வைக் கொண்ட ஒரு சூழல் நட்பு ரயிலாகக் கருதப்படுகிறது.
முற்றிலும் நவீன வசதிகளுடன் கூடிய 10 பெட்டிகளைக் கொண்டுள்ள இந்த ஹைட்ரஜன் ரயில், மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த ஆரம்பகட்ட தொழில்நுட்பத்திற்கான முதலீடு சற்று அதிகமாக இருந்தாலும், நீண்டகால நோக்கில் காற்று மாசைக் குறைக்கவும் பசுமை ஆற்றலை மேம்படுத்தவும் இது பெரிதும் உதவும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய சோதனை ஓட்டம் வெற்றியடையும் பட்சத்தில், எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களிலும் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
