LATEST NEWS
“பெயருக்கு முன்னாடி ‘டாக்டர்’னு போடாதீங்க” பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 4 வயது சிறுமிக்கு சிகிச்சை மறுத்த மருத்துவமனைகள்.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் ஆக்ரோஷம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 4 வயது சிறுமிக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க மறுத்த இரண்டு தனியார் மருத்துவமனைகள் மற்றும் அங்குள்ள மருத்துவர்கள் மீது உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. “சிறுமி ஏழை என்பதால் அவளது நிலையை நீங்கள் அலட்சியம் செய்துவிட்டீர்கள். உங்கள் கடமையைச் செய்யாதபோது உங்கள் பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ என்று போடுவதற்கே உங்களுக்குத் தகுதியில்லை; அதை நீக்கிவிடுங்கள்” என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு மிகக் கோபமாகச் சாடியுள்ளது.
கடந்த மார்ச் 16-ஆம் தேதி அண்டை வீட்டுக்காரரால் மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட அந்தச் சிறுமி, பின்னர் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். தவித்துப் போன அவளது பெற்றோர் இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றும் கட்டணம் செலுத்த முடியாது என்ற காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின் மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்திருந்தால் சிறுமியின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) தனது அறிக்கையில் உறுதி செய்துள்ளது.
இந்த வழக்கில் உள்ளூர் காவல்துறையின் அலட்சியப் போக்கும் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனடியாகப் புகார் அளிக்கச் சென்றபோது, வழக்கைப் பதியாமல் அவர்கள் மீதே காவல்துறை தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போதைய விசாரணையின்படி, கடமை தவறிய அந்தத் தனியார் மருத்துவமனைகள் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்குத் தங்களின் பங்காகத் தொகையைத் தானமாக வழங்க வேண்டும் என்றும், தவறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
