LATEST NEWS
ஜூலை 20 வரை நான் எப்படியாவது உயிரோடு இருப்பேன்.. இல்லாவிட்டால் பேயாக திரும்பி வருவேன்.. சோனம் வாங்சுக் பகீர்…!!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மத்திய அரசின் குளறுபடிகளை கண்டித்து, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் இணைந்து அவர் மேற்கொண்டு வரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பல்வேறு தரப்பினரும் அவருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் திரண்டிருந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய சோனம் வாங்சுக், ஜூலை 20 அன்று ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், “உங்கள் அனைவருடனும் சேர்ந்து நாடாளுமன்றத்திற்குப் பேரணி செல்வதற்காக, ஜூலை 20 வரை நான் எப்படியாவது உயிரோடு இருப்பேன். அப்படி இல்லையெனில், அன்று நடத்தப்படும் நமது பேரணி வெற்றி பெறவில்லை என்றால், நான் ஒரு பேயாகத் திரும்பி வருவேன்” என உணர்ச்சிவசப்பட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக சோனம் வாங்சுக் உணவு உட்கொள்ளாமல் போராடி வருவதால், அவரது உடல் எடை சுமார் 9.5 கிலோ வரை குறைந்து தற்போது 56.55 கிலோவாக சரிந்துள்ளது. உண்ணாவிரதம் நீடித்தால் அவரது முக்கிய உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ள நிலையில், அவரது உடல்நிலையை மத்திய அரசு தினந்தோறும் தீவிரமாகக் கண்காணித்து தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
