LATEST NEWS
“மக்களோட உசுரு தான் எங்களுக்கு முக்கியம்” கொட்டும் மழையில் நனைந்தபடி உணவருந்திய சீன தீயணைப்பு வீரர்… இணையத்தைக் கண்ணீர் வைக்க வைத்த வைரல் வீடியோ..!!
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் பெய்த கனமழை காரணமாகப் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. கொட்டும் மழையில் நனைந்தபடியே, சாலை ஓரத்தில் அமர்ந்து அந்த வீரர் மிகவும் அவசரமாக உணவு உண்ணும் காட்சிகள் இணையவாசிகளை நெகிழச் செய்துள்ளது. தனது கடமையின் மீதான அர்ப்பணிப்பு மற்றும் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்ற அவரது துடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
சமூக ஊடகங்களில் வைரலான அந்த தீயணைப்பு வீரரின் பெயர் லியாங் ஹுவான் ஆகும். தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த இவர், தனது குழுவினருடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிக்காக வந்திருந்தார். கடந்த ஜூலை 9-ம் தேதி, பல நாட்களாகத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு களைப்படைந்திருந்த லியாங், மிதவை ஜாக்கெட்டுகள் மீது அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த மழை பெய்தபோதிலும், பசியின் காரணமாக மழையில் நனைந்தபடியே, முகத்தில் விழும் மழைத்துளிகளைத் துடைத்துக் கொண்டு அவர் தொடர்ந்து உணவை உட்கொண்டார்.
பாதிக்கப்பட்ட பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லும் முக்கியப் பொறுப்பு லியாங் மற்றும் அவரது குழுவினருக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது குறித்துப் பேசிய லியாங், “மக்களை ஒரு நிமிடம் முன்னதாக மீட்டெடுத்தால் கூட, அவர்கள் ஒரு நிமிடம் முன்னதாகப் பாதுகாப்பாக இருப்பார்கள். நாங்கள் எவ்வளவு சோர்வடைந்தாலும், மக்களின் உயிரைக் காப்பதுதான் எங்களுக்கு முக்கியம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவரது இந்த அர்ப்பணிப்பு உணர்வைப் பாராட்டும் இணையவாசிகள், அதே நேரத்தில் மழையில் நனைந்த உணவை உண்பதால் அவரது உடல்நலம் பாதிக்கப்படலாம் என்ற தங்களின் கவலையையும் பகிர்ந்து வருகின்றனர்.
