LATEST NEWS
“என்னது…! பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்கு 4000 ரூபா லஞ்சமா..? அதுக்கு எதுனா பில் தருவீங்களா சார்..?” லஞ்சம் கேட்க வந்த போலிஸை நாக்-அவுட் பண்ணிய இன்ஜினியர்..!!
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டம் இந்திராபுரம் பகுதியில் பாஸ்போர்ட் சரிபார்ப்பின் போது, மென்பொருள் பொறியாளரிடம் காவல் துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திராபுரத்தில் உள்ள மென்பொருள் பொறியாளரின் வீட்டிற்கு பாஸ்போர்ட் சரிபார்ப்பிற்காக வந்த காவலர், ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு கணக்கை முடிக்குமாறு லஞ்சம் கேட்டுள்ளார்.
அந்த மென்பொருள் பொறியாளர் ஐபிஎம் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். காவலர் பணம் கேட்கும்போது, எவ்வளவு தர வேண்டும் என்று பொறியாளர் கேட்க, அதற்கு அந்தக் காவலர் ரூ. 2,000 முதல் ரூ. 4,000 வரை தர வேண்டும் என்றும், இந்தத் தொகையைக் காவல் நிலையத்தில் கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் கூறியதாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்ட பொறியாளர், எதற்காகப் பணம் தர வேண்டும், அதற்கு ரசீது தரப்படுமா, வருமான வரி விலக்கு கிடைக்குமா அல்லது இது ஏதேனும் கமிஷனா என்று தொடர்ச்சியாகக் கேள்விகளைக் கேட்டு அந்த அதிகாரியிடம் விளக்கம் கோரியுள்ளார்.
மேலும், பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்தவர்கள் சரிபார்ப்பிற்கு வரும் காவலர்கள் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை கேட்பார்கள் என்று கூறியதாக அந்தப் பொறியாளர் காவலரிடம் தெரிவித்தார். பொறியாளரின் இந்த அடுக்கடுக்கான கேள்விகளால் அசௌகரியமடைந்த அந்தச் சரிபார்ப்பு அதிகாரி, தொகையைப் பெறாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். இது குறித்துத் தெரிவித்துள்ள உதவி காவல் ஆணையர் சூர்யபாலி மௌரியா, இந்த வீடியோ மிகவும் பழையது போலத் தெரிவதாகவும், அதில் காணப்படும் காவலர் தற்போது இந்திராபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு, உண்மைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
