LATEST NEWS
“என் உயிருக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்து..! தலைமுடியைப் பிடித்து தரையில் தள்ளி…” மனைவி மீது முன்னாள் எம்.எல்.ஏ குட்டு பண்டிட் கொடூரத் தாக்குதல்… உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீபகவான் சர்மா என்ற குட்டு பண்டிட் மீது, அவரது மனைவியும் காங்கிரஸ் தலைவருமான அர்ச்சனா பாண்டா கடுமையான தாக்குதல் மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள அர்ச்சனா, முன்னாள் எம்.எல்.ஏ மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமக்கும் தம் குழந்தைகளுக்கும் உடனடி போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அர்ச்சனா பாண்டா அளித்துள்ள புகாரின்படி, அவர் தனது மகனுடன் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த குட்டு பண்டிட் கதவை பலமாகத் தட்டி வெளியே நின்று கத்தியுள்ளார். அர்ச்சனா கதவைத் திறக்கச் சென்றபோது, குட்டு பண்டிட் அவரைத் தள்ளிவிட்டதில் அவர் தரைத்தளத்தில் விழுந்துள்ளார். அதன்பின்னர், அவர் அர்ச்சனாவை தகாத வார்த்தைகளால் திட்டி, தரையில் கிடந்த அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது கதறிய அர்ச்சனாவின் சத்தம் கேட்டு வந்த வீட்டு வேலைக்காரர், தனது கைப்பேசியில் இச்சம்பவத்தைப் படம்பிடிக்கத் தொடங்கியதும், குட்டு பண்டிட் தாக்குதலை நிறுத்திவிட்டுப் பின்வாங்கியுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து எப்படியோ வீட்டிலிருந்து வெளியேறிய அர்ச்சனா, போலீசாருக்குத் தகவல் தெரிவித்து விட்டு எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார். குட்டு பண்டிட் மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து தமக்கும் தம் குழந்தைக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தாம் திரும்பப் பெறப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் 24 மணி நேரமும் பெண் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரியுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், வைரல் வீடியோ மற்றும் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
