LATEST NEWS
செய்யுறதெல்லாம் செஞ்சிபுட்டு வீட்டுக்குப்போய் ட்வீட்டா..? நீங்க இன்னும் மாண்புமிகு ஆகல… பொங்கிய திமுக பரந்தாமன்… தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு..!!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் தற்போதைய முதலமைச்சர் விஜய் சைகை காட்டியதாக எழுந்த விவகாரம், ஆளும் தவெக மற்றும் திமுக இடையே பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது முதலமைச்சர் விஜய் செய்த இந்த உடல் கேலி செய்கை பரவலான கண்டனங்களைப் பெற்றது. இதுகுறித்து ட்விட்டர் தளம் வாயிலாக விளக்கமளித்த முதலமைச்சர் விஜய், அது உள்நோக்கம் இல்லாத எதேச்சையான ஒரு செயல் மட்டுமே என்று குறிப்பிட்டிருந்தார்.
முதலமைச்சரின் இந்த விளக்க ட்வீட்டிற்கு திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் கடும் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சட்டமன்றத்தில் எல்லாவற்றையும் செய்துவிட்டு, பின்பு வீட்டுக்குப்போய் ட்வீட் போடுவது நீங்கள் இன்னும் மாண்புமிகு ஆகவில்லை என்பதையேக் காட்டுகிறது” என்று காரசாரமாக விமர்சித்துள்ளார். மேலும், முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பிறகு இது போன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவது இது இரண்டாவது முறை என்றும், திட்டமிட்டே தியாக வரலாற்றுத் தலைவர்களை அவர் கொச்சைப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் பணியில் உழைப்பும் தியாகமும் தராமல், வெறும் ஊதாரித்தனமான வசனங்கள் மற்றும் இணையதள பொய் பரப்புரைகள் மூலம் பதவிக்கு வந்ததால் தான் முதலமைச்சர் பதவியின் மாண்பை அவரால் உணர முடியவில்லை என்றும் பரந்தாமன் சாடியுள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கைக்கு முறையான பதிலளிக்கத் தெரியாத ஒரு “பொம்மை முதலமைச்சர்” ஆக விஜய் தன்னைத் தானே வரலாற்றில் பதிவு செய்து கொண்டார் என்றும் அவர் சாடியுள்ளார். இனிமேலாவது திமுகவைக் குற்றம் சுமத்துவதை நிறுத்திவிட்டு, உயரிய பொறுப்பை உணர்ந்து முதலமைச்சர் பணியாற்ற வேண்டும் என்று தனது பதிவில் பரந்தாமன் வலியுறுத்தியுள்ளார்.
