LATEST NEWS
“அய்யோ கொடுமையே… சிறுநீர் கழித்ததைத் தட்டிக்கேட்டது ஒரு குத்தமா..?” செங்கல்லால் தலையில் தாக்கி 47 வயது நபர் படுகொலை… நடுரோட்டில் நடந்த கொடூரம்..! சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நடுரோட்டில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்ட 47 வயதுடைய கடைக்காரர், போதை ஆசாமிகள் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் காகாதேவ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓம் சௌராஹா பகுதியில் சனிக்கிழமை இரவு இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட அமித் குமார், நவீன் நகரில் வசித்து வந்ததோடு ‘பிரேம் ஆட்’ என்ற கடையையும் நடத்தி வந்தார். சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் கடையைப் பூட்டிவிட்டு அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, சந்திப்புப் பகுதிக்கு அருகில் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவன் சாலையில் சிறுநீர் கழிக்கத் தொடங்கியதை அமித் தட்டிக்கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரைச் சூழ்ந்துகொண்டு தாக்கியுள்ளது. அமித்தின் மகன் ருத்ர பிரதாப் சிங் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் தனது தந்தையைத் தரக்குறைவாகப் பேசியதுடன், செங்கல்லால் தலை மீது பலமாகத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார் என்றும், தடுக்க வந்த பொதுமக்களையும் அவர்கள் தாக்கி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து உள்ளூர்வாசிகள் 112 என்ற அவசர எண்ணிற்குத் தகவல் தெரிவித்தனர். பலத்த காயமடைந்த அமித், முதலில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் தீவிர சிகிச்சைக்காக அனுராக் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ள காவல் துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட 4 இளைஞர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குடும்பத்தினரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்து சிறையில் அடைப்போம் என்றும் காகாதேவ் காவல் நிலைய அதிகாரி தர்மேந்திர ராம் தெரிவித்துள்ளார்.
