LATEST NEWS
முதலில் கொடூரக் கொலைகள்.. அப்புறம் கதாநாயக சாகசத்தை காட்டலாம்னு நினைக்குறீங்களா..? முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்பி காட்டம்..!!
தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூரக் கொலை அரங்கேறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு குறித்து DMK MP கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மாநகரில் நாள்தோறும் தொடரும் கொலை, கொள்ளை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் திரைப்படக் கதாநாயகனான முதலமைச்சர் விஜய், வணிகத் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போலச் செயல்படுகிறாரோ என்ற பலத்த சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை என்று கனிமொழி சாடியுள்ளார். திரைப்படங்களின் ஆரம்பக் காட்சிகளில் கொடூரக் கொலைகள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் இறுதிக்கட்டங்களில் தனது ‘கதாநாயக சாகசங்களை’க் காட்டுவது போன்ற ஏதேனும் திட்டத்தை அவர் வைத்துள்ளாரா என்ற குழப்பம் மக்களிடையே எழுவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே சட்டம் – ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், இத்தகைய தொடர் குற்றச்சம்பவங்கள் குறித்து அரசு உடனடியாகப் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சரின் இத்தகைய மெத்தனப் போக்கு மாநிலத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்தும் தற்பொழுது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
