LATEST NEWS
MLA-ன்னா செருப்பு போடக்கூடாது, தலைசீவக்கூடாதா..? என்ன அழகான பொம்மைன்னு நினைக்காதீங்க.. நான் ஆபத்தான பொம்மை பக்கத்துல வராதீங்க… திமுகவுக்கு சாட்டையடி பதில் கொடுத்த MLA கனிமொழி…!!
கோவை கவுண்டம்பாளையம் தொகுதித் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், தனது சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் குறித்து எழுப்பப்பட்டுள்ள விமர்சனங்களுக்குக் காட்டமாகப் பதிலளித்துள்ளார். மக்கள் வரிப்பணத்தைச் சுரண்டி 26 கார்களை வாங்கியதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித சட்டரீதியான ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்த அவர், தொழிலதிபராக உழைத்துச் சம்பாதிக்கும் தங்களை விமர்சிப்பவர்கள் நேருக்கு நேர் வந்து பேசத் தைரியம் உள்ளவர்களா எனச் சவால் விடுத்து ஆக்ரோஷமாகப் பேசினார்.
சட்டமன்றத்தில் புதிய உறுப்பினர்களுக்கான கண்ணியம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்துக் கற்றுத்தரப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அவை சட்டமன்ற அமைதிக்கு மட்டுமே கட்டுப்பட்டது என்று விளக்கினார். எதிர்க்கட்சியினரும் இணையதள ட்ரோலர்களும் தங்களை அமைதியாக இருக்கிறார்கள் என்பதற்காகத் தொடர்ந்து வம்பிழுத்தால் அமைதியாக இருக்க முடியாது எனக் கூறிய அவர், சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால் செருப்பு போடக் கூடாது, தலைசீவக் கூடாது என நினைக்கிறீர்களா என்றும் கடுமையான கேள்விகளை எழுப்பினார்.
பெண் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களைக் குறிவைத்துச் சமூக வலைதளங்களில் நடத்தப்படும் புறம்பேசும் செயல்களையும் அவதூறுகளையும் அவர் வன்மையாகக் கண்டித்தார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே ஜோதிட ஆலோசனைக்காகத் தன்னைத் தொடர்புகொண்டு ‘தேர்தலில் ஜெயிப்போமா மாட்டோமா’ என்று கேட்ட தொலைபேசி உரையாடல் பதிவு (Call Record) தன்னிடம் இருப்பதாகக் கூறி பகிரங்கக் குற்றச்சாட்ட முன்வைத்தார்.
“என்னை அழகிய பொம்மை என்று நினைப்பவர்களுக்குச் சொல்கிறேன்; இந்த அழகிய பொம்மை ஆபத்தான பொம்மையும் கூட, எனவே தூர நின்று பேசுங்கள்” என எச்சரித்த அவர், தன் மீதான விமர்சனங்களை அஞ்சாமல் எதிர்கொள்வேன் என்றார். தவெக தலைவர் விஜய்யின் வழிகாட்டுதலோடும் மக்களின் ஆதரவோடும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், எந்த அவதூறுகளுக்கும் அஞ்சப்போவதில்லை என்றும் உறுதியளித்தார்.
