LATEST NEWS
நெஞ்சை பதறவைக்கும் விபத்து..! கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்கிற்குள் பாய்ந்த TSRTC பேருந்து.. நூலிழையில் தப்பிய உயிர்கள்…!!
ஐதராபாத் நகரின் புறநகர்ப் பகுதியான படாசிங்காரத்தில் , கட்டுப்பாட்டை இழந்த தெலுங்கானா அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று, சாலையோரம் இருந்த பெட்ரோல் பங்கிற்குள் அதிவேகமாகப் புகுந்து மோதியதில் ஒரு பெரும் விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. சாலையில் சென்ற ஆட்டோ ஒன்றின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் முயற்சித்தபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்கிற்குள் அசுர வேகத்தில் புகுந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திகிலூட்டும் முழுச் சம்பவமும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
https://x.com/HateDetectors/status/2098002971426738576?s=20
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித உயிர்ச்சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்றாலும், பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். பேருந்து மோதிய வேகத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் முற்றிலும் நொறுங்கியதுடன், மற்றொரு வாகனமும் பலத்த சேதமடைந்தது. மேலும், டீசல் விநியோக இயந்திரங்கள் மற்றும் பங்கின் பிற உபகரணங்களும் பெருமளவில் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக எரிபொருள் கசிவு எதுவும் ஏற்படாததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அப்துல்லாபூர்மெட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
