CINEMA
70 ஆண்டு கால இசைப் பயணம்… “செண்பகமே செண்பகமே” டூ “கொஞ்ச நேரம்”…! ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள்…!!
இந்தியத் திரையிசையின் முடிசூடா அரசியாகத் திகழ்ந்த பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி உலக சாதனை படைத்தவர். பத்ம விபூஷண், தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்ற இவரின் மறைவு, ஒட்டுமொத்த இசை உலகையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழில் இவர் பாடிய பாடல்கள் எண்ணிக்கை குறைவு என்றாலும், அவை ஒவ்வொன்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த காவியங்களாகும்.
‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் வரும் “செண்பகமே செண்பகமே” பாடல் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர், பின்னர் ‘ஹேராம்’ படத்தில் “நீ பார்த்த பார்வை”, ‘அலைபாயுதே’வில் “செப்டம்பர் மாதம்”, சந்திரமுகியில் “கொஞ்ச நேரம்” எனப் பல சூப்பர் ஹிட் பாடல்களைத் தனது கொஞ்சும் குரலால் அலங்கரித்துள்ளார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா எனப் பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து இவர் பணியாற்றியுள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் பாடிய பாடல்கள் இன்றும் வானொலிகளில் ஒலித்துக் கொண்டிருப்பது இவரின் இசை ஆளுமைக்குச் சான்றாகும்.
