CINEMA
“அவர் வீட்டில் இல்லை, அதனால்…”ரஜினி நடிக்கவிருந்த ‘சூர்யவம்சம்’…கைநழுவிப்போன மெகா வாய்ப்பு…சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரி முதலில் ரஜினியிடம் கொண்டு சென்ற ‘அந்த’ கதை…திருப்பூர் சுப்ரமணியம் உடைத்த ரகசியம்…!
இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா உள்ளிட்டோரின் நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆன திரைப்படம் ‘சூர்யவம்சம்’. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் வெளியான இப்படம், சாதாரண ஒரு கதைக் களத்தைக் கொண்டிருந்தாலும் விக்ரமனின் எதார்த்தமான திரைக்கதையாலும், குடும்பப் பாங்கான காட்சிகளாலும் தமிழ்நாட்டு குடும்பங்களின் ஆல்டைம் ஃபேவரைட் படமாக உருவெடுத்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்ட இத்திரைப்படம், தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸிற்கு மிக பிரம்மாண்ட லாபத்தை ஈட்டித் தந்தது.
இந்நிலையில், இத்திரைப்படம் குறித்த ஒரு சுவாரசியமான புதிய தகவலை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் அதிபர் ஆர்.பி. சௌத்ரி, சூர்யவம்சம் திரைப்படத்தின் கதையைக் கேட்டவுடன், அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று ஆசைப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விக்ரமனுக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் இருந்த நல்ல புரிதலின் காரணமாக இந்த மெகா கூட்டணியை உருவாக்க ஆர்.பி. சௌத்ரி திட்டமிட்டிருந்தார்.
இதுகுறித்து ரஜினிகாந்திடம் பேசுவதற்காக திருப்பூர் சுப்ரமணியம் அன்று மதியமே அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக ரஜினிகாந்த் வீட்டில் இல்லாததால் அவரைச் சந்திக்க முடியாமல் போயுள்ளது. இத்தகவலை திருப்பூர் சுப்ரமணியம் தொலைபேசி வாயிலாக ஆர்.பி. சௌத்ரியிடம் தெரிவித்தபோது, அவர் சற்றும் யோசிக்காமல், “சரி விடுங்கள், இக்கதையில் ரஜினி நடித்தாலும் ஹிட்தான், சரத்குமார் நடித்தாலும் ஹிட்தான்” என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார். அந்த அசைக்க முடியாத நம்பிக்கையின்படியே, சரத்குமார் நடிப்பில் உருவான சூர்யவம்சம் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு காவியமாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
