LATEST NEWS
ஓமன் கப்பலில் இந்திய மாலுமி நிஷாந்த் மர்ம மரணம்…ஓடிவந்து கதறும் மனைவி…தண்ணீர் பாட்டில்களை அடுக்கி வைக்கப்பட்ட பிணம்… தூத்துக்குடி மாலுமிக்கு நேர்ந்த கொடூரம்… கப்பல் நிறுவனத்தின் மனிதாபிமானமற்ற செயல்…!
ஓமன் நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த இந்தியக் கப்பல் மாலுமி நிஷாந்த் (Second Officer), கடந்த ஜூன் 12 அன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு வரை தன்னிடம் சாதாரணமாகப் பேசிய கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நிஷாந்தின் மனைவி சராபின் குற்றம் சாட்டியுள்ளார். தனது கணவரின் மரணத்திற்கான உண்மை காரணத்தைக் கண்டறிய உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், கப்பல் நிறுவனத்திடமிருந்து தகுந்த இழப்பீடு பெற்றுத் தந்து, அவரது உடலை உடனடியாகச் சொந்த ஊருக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு அளித்துள்ளார்.
இதற்கிடையில், நிஷாந்துடன் அதே கப்பலில் பணியாற்றிய சக ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. உயிரிழந்த நிஷாந்தின் உடலைக் கப்பல் நிறுவனம் முறையாகக் குளிர்சாதன வசதியுடன் (Freezer) பாதுகாக்காமல், மனிதாபிமானமற்ற முறையில் ஒரு சாதாரணப் பகுதியில் போட்டு வைத்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உடல் அழுகிப் போகாமல் இருப்பதற்காக, அதன் மீது சாதாரணக் குளிர்ந்த தண்ணீர் பாட்டில்களை அடுக்கி வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள ஊழியர்கள், இந்திய வெளியுறவுத்துறை மற்றும் கப்பல் துறை அமைச்சகம் உடனடியாகத் தலையிட்டு, நிஷாந்தின் உடலைப் பாதுகாப்பாக மீட்டுத் தூத்துக்குடிக்கு அனுப்ப வேண்டும் என உருக்கமாகக் கோரியுள்ளனர்.
இச்சம்பவம் தூத்துக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள அதே வேளையில், சர்வதேசக் கடல் பகுதியில் இந்தியக் கப்பல் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்தப் பெரும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வீடியோக்களைப் பகிர்ந்து வரும் மாலுமிகள், “நாங்கள் ஆயுதம் ஏந்திய ராணுவப் படைகள் இல்லை; ஆனால், சமீபகாலமாக இந்தியக் கப்பல்கள் திட்டமிட்டுக் குறிவைக்கப்பட்டுத் தாக்கப்படுகின்றன. எங்களுக்குக் கடல் பகுதியில் எந்தப் பாதுகாப்பும் இல்லை” எனத் தங்களது அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு திறமையான இந்திய மாலுமியின் மர்ம மரணமும், அவரது உடலுக்கு இழைக்கப்படும் அவமரியாதையும் சர்வதேச அளவில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்புச் சூழலை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.
