LATEST NEWS
“புது ரூட் ஓபன்… ஆட்டம் காணும் உலக எண்ணெய் சந்தை..!” ஈரானும் ஓமனும் போட்ட அந்த மாபெரும் மாஸ்டர் பிளான்… பதறும் அமெரிக்கா..!!
அமெரிக்கா – ஈரான் இடையிலான தீவிரப் போர்ப் பதற்றத்தால், சர்வதேச அளவில் 20% கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு பரிமாற்றத்திற்குப் பயன்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. இச்சூழலில், அப்பாதையில் சரக்குக் கப்பல்களின் இயக்கத்தைச் சீராக்க ஓமனும் ஈரானும் இணைந்து ஒரு முக்கிய தீர்வைக் கண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, வழக்கமான இரண்டு தனித்தனிப் பாதைகளுக்குப் பதிலாக ஈரானிய பிராந்தியக் கடலுக்குள் அமைக்கப்பட்ட ஒற்றைப் பாதை மட்டுமே 2 முதல் 4 மாதங்களுக்குத் தற்காலிகமாகப் பயன்படுத்தப்படும். இதன் மூலம் வளைகுடாவிற்குள் நுழையும் கப்பல்களைப் பரிசோதிக்கும் அதிகாரத்தை ஈரான் பெறுகிறது.
ஓமனுடன் உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை திரும்பப் பெறப்படாத வரை கப்பல்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்க முடியாது என ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், ஹார்முஸைக் கடக்கும் கப்பல்களுக்கு 5% முதல் 7% வரை சேவைக் கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டமிட்டு வரும் வேளையில், எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என அமெரிக்கா எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளது. “ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாகத் திறக்கப்படாவிட்டால் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தாலும், தாங்கள் அமெரிக்காவுடன் நேரடியாகப் பேசாமல் ஓமனுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவதாக ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.
சுமார் 21 நாட்டிக்கல் மைல்கள் அகலம் கொண்ட குறுகிய ஹார்முஸ் கடற்பகுதியானது சர்வதேச கடல் சட்டங்களின்படி ஈரான் மற்றும் ஓமன் எல்லைகளுக்குள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதனால், புதிய கடல்வழிப் பாதையை அமைத்து போக்குவரத்தைச் சீரமைக்க ஈரானுக்கு ஓமனின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகிறது. அரபு நாடுகளில் எந்தப் பக்கமும் சாராத நடுநிலைக் கொள்கையைப் பின்பற்றும் ஓமன், ஈரான் மேற்கத்திய நாடுகளுடன் நேரடியாகப் பேச விரும்பாத நேரங்களில் முக்கிய அமைதிப் பாலமாகச் செயல்பட்டு வருகிறது.
