LATEST NEWS
“அவர்களை கதற கதற அடிப்போம்” டிரம்ப் எச்சரித்த சில மணி நேரத்தில் நடந்த ஷாக்.. பதற்றத்தில் ஈரான்… மீண்டும் உலகளவில் பரபரப்பு..!!
அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதான ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கா தற்போது ஈரான் நாட்டின் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளம் ஒன்றைக் குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தத் தீவிரமான ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் வகையில் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த குண்டுவீச்சு, இந்த புதிய மோதலால் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்குச் சற்று முன்னதாக, ஈரானுக்கு மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தார். அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த வான்வழித் தாக்குதல்கள் இரவு 8 மணியளவில் தொடங்கின. ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகளை நோக்கி ஈரான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் தடுத்து அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடரும் வரை தங்களுடைய எதிர்ப்பும் தொடரும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது. மேலும், தங்களுடைய அனுமதியின்றி ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) நெருங்க முயன்ற மூன்று எண்ணெய் கப்பல்களைத் தங்களின் கடற்படை இலக்கு வைத்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இந்தத் திடீர் ராணுவ நடவடிக்கைகளால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
