LATEST NEWS
மனசுக்கு வேதனையா இருக்கு… 5 லட்சம் கோடியில் வெறும் 14000 கோடி தான் வேளாண் பட்ஜெட்டா..? புள்ளிவிவரத்துடன் சௌமியா அன்புமணி அதிரடி..!
தமிழக அரசிடமிருந்து கூட்டுறவு கடன் தள்ளுபடி போன்ற முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்த்த நிலையில், இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது என்று பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பொது பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் வேளாண்மை போன்ற முக்கிய துறைகளுக்கு தலா 6% நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதே பொதுவான விதிமுறையாகும். ஆனால் தற்போதைய பட்ஜெட்டில் இந்தத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு 1 சதவீதத்திற்கும் குறைவாகவே குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய சௌமியா அன்புமணி, “மொத்தமுள்ள 5 லட்சம் கோடி பட்ஜெட்டில், வேளாண் துறைக்கு வெறும் 14,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டினார். முந்தைய பட்ஜெட்டை விட தற்போதைய வேளாண் நிதி ஒதுக்கீடு பல நூறு கோடிகள் வரை குறைக்கப்பட்டிருப்பது தனக்கு மனதளவில் மிகுந்த வேதனையை அளிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், 60 முதல் 70 சதவீத மக்கள் விவசாயத்தையே நம்பி வாழும் ஒரு மாநிலத்தில், வேளாண்மையை முற்றிலும் புறக்கணித்துவிட்டு ‘சூப்பர் எகனாமி’ என்ற இலக்கை எப்படி எட்ட முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நீர்ப்பாசனத் திட்டங்களுக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், காவேரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு குறைந்தபட்சம் 2,500 கோடி ரூபாயாவது தேவைப்படும் சூழலில், வெறும் 150 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதையும் சாடினார். இதேபோல் நெல் கொள்முதல் நிலையங்களில் முறையான மேற்கூரைகள் அமைக்கப்படாமல், தார்பாய்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது கேள்விக்குறிதான் என்றும், விவசாயத்திற்குத் தண்ணீர் இல்லாதபோது இதுபோன்ற திட்டங்களை எப்படிச் செயல்படுத்துவார்கள் என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
