LATEST NEWS
“இவரு அரசியல்வாதியா.. டாக்டரா…? சாலையில் உயிருக்குப் போராடிய பெண்… சொந்த காரில் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த எம்.எல்.ஏ விக்ராந்த் பூரியா..!!”
மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும், தேசிய பழங்குடியின காங்கிரஸின் தலைவருமான டாக்டர் விக்ராந்த் பூரியா, கல்யாண்பூர் பகுதிக்குத் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பவாடியா கிராமம் அருகே, சாந்தி மேடா என்ற பெண் சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை அவர் கண்டார். இதைப் பார்த்தவுடன் உடனடியாகத் தனது வாகனத்தை நிறுத்திய எம்.எல்.ஏ விக்ராந்த் பூரியா, விரைந்து சென்று அப்பெண்ணை மீட்க நடவடிக்கை எடுத்தார்.
தலையில் இருந்து தொடர்ந்து ரத்தம் வெளியேறியதால், அங்கிருந்த மக்களின் உதவியோடு அந்தப் பெண்ணை மீட்டுத் தனது சொந்த காரிலேயே ஏற்றி, அருகில் உள்ள அரசு சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அப்பெண்ணிற்கு முதலுதவி செய்ய டிரெஸ்சர் யாரும் பணியில் இருக்கவில்லை. அறுவை சிகிச்சை நிபுணரான எம்.எல்.ஏ விக்ராந்த் பூரியா, தாமதிக்காமல் தானே களத்தில் இறங்கி அப்பெண்ணின் காயங்களைச் சுத்தம் செய்து, அவரது தலையில் 7 தையல்கள் போட்டு உடனடியாகச் சிகிச்சை அளித்தார்.
இந்தச் சம்பவத்தின் போது, பல மாதங்களாக எக்ஸ்ரே இயந்திரம் பயன்படுத்தப்படாமல் இருப்பது மற்றும் மருந்தாளுநர், டிரெஸ்சர் போன்ற பணியாளர்கள் இல்லாமலிருப்பது என அந்த அரசு சுகாதார மையத்தின் அவல நிலையும் வெளிச்சத்திற்கு வந்தது. தொழில்முறையில் மருத்துவரான விக்ராந்த் பூரியா எம்.பி.பி.எஸ், எம்.எஸ் தங்கம் வென்றவர். இவர் இதுபோன்று அவசர காலத்தில் உதவிக் கரங்கள் நீட்டுவது இது முதல்முறையல்ல; முன்னதாக விமானப் பயணத்தின் போது மாரடைப்பு ஏற்பட்ட ஒரு சக பயணியின் உயிரையும் அவர் உடனடியாக முதலுதவி அளித்துக் காப்பாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
