LATEST NEWS
“இனி கவலை வேண்டாம்..! தபால் மூலமே ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம்… ஆர்பிஐ தந்த குட் நியூஸ்..!!!”
பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை இன்னமும் மாற்றிக்கொள்ள அல்லது தங்களது வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என்று பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டாலும், அவை இன்னும் சட்டப்பூர்வமாகச் செல்லும் என்று ரிசர்வ் வங்கி திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
பொது வணிக வங்கிக் கிளைகளில் இந்த நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 2023 உடன் முடிவடைந்துவிட்டதால், தற்போது சாதாரண வங்கிகளில் இவற்றை மாற்ற முடியாது. அதற்குப் பதிலாக, பொதுமக்கள் நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று தங்களது ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு நேரடியாக மாற்றும்போது ஒரு முறைக்கு அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை மட்டுமே மாற்ற அனுமதிக்கப்படும். ஆனால் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வதற்கு எவ்வித உச்சவரம்பும் இல்லை.
ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்ல முடியாதவர்களுக்காக அஞ்சல் வழி வசதியும் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்தியாவின் எந்தவொரு தபால் நிலையத்திலிருந்தும் தங்களது ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி முகவரிக்கு ‘பதிவு அஞ்சல்’ மூலம் அனுப்பி, தங்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைத்துக் கொள்ளலாம். இதற்காக பொதுமக்கள் தங்களின் அடையாள அட்டை (ஆதார் அல்லது பான் கார்டு) மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 98.4 சதவீதத்திற்கும் அதிகமான நோட்டுகள் ஏற்கனவே வங்கிக்குத் திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.
