CINEMA
அடுத்தடுத்து சரியும் தூண்கள்…!ஆர்.பி.சௌத்ரி, கே.ராஜனைத் தொடர்ந்து கோவை மணி… மே மாதத்தில் கோலிவுட்டை உலுக்கும் மரணங்கள்…!அடுத்தடுத்து நிகழும் சோகங்களால் கண்ணீர் கடலில் மூழ்கிய ரசிகர்கள்…!
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் அடுத்தடுத்த மரணங்கள் ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தி வருகின்றன. கடந்த சில மாதங்களாக வரிசையாகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்கள் மரணமடைந்து கண்ணீர் கடலில் ஆழ்த்திய சோகம் இன்னும் மறையாத நிலையில், தற்போது முன்னணி தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது தமிழ் சினிமாவை மீண்டும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
அண்மையில்தான் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அதிபரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி எதிர்பாராத விதமாகக் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தி திரையுலகை உலுக்கியது. அந்தப் பேரதிர்ச்சியில் இருந்தே மீளாத நிலையில், தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த கோலிவுட்டையும் ஸ்தம்பிக்க வைத்தது. இத்தகைய தொடர் சோக நிகழ்வுகளின் நீட்சியாக, தற்போது மேலும் ஒரு பிரபல தயாரிப்பாளர் காலமான செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கோவை மணி (69), உடல்நலக் குறைவு காரணமாக இன்று (மே 23, 2026) அதிகாலையில் இயற்கை எய்தினார். ‘பாட்டாளி மகன்’, ‘விக்னேஷ்வர்’, ‘மாசி’, ‘மிஸ்டர் மகாராணி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துத் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் இவர். தயாரிப்பாளராக மட்டுமின்றி, ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் நீண்டகால மேலாளராகவும் (Manager) பணியாற்றித் திரையுலகில் அனைவருடனும் இணக்கமான நட்பைப் பேணி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை மணி, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்ததாக அவரது தம்பி செல்வம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். மறைந்த கோவை மணிக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். திரையுலகினரின் அஞ்சலிக்காக அவரது உடல் சென்னை, கூடுவாஞ்சேரி அருகேயுள்ள சாய்ராம் பேடு, எஸ்.என். கார்டன், பிளாட் எண் 20/21 என்ற முகவரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
