CINEMA
ஜார்ஜ் குட்டியின் ‘மொக்கை பிளான்’…!கடைசி 30 நிமிடம் மட்டும்தான் படமா? திரிஷ்யம் 3-க்கு விழுந்த மரண அடி…!திரிஷ்யம் 3-ஐ வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்…!
மோகன்லால், மீனா, எஸ்தர் அனில் மற்றும் சித்திக் உள்ளிட்டோரின் நடிப்பில், இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது ‘திரிஷ்யம் 3’. முந்தைய இரண்டு பாகங்களின் பிரம்மாண்ட வெற்றியால், இந்த படத்திற்கான முன்பதிவு உலகளவில் தாறுமாறாக இருந்தது. இந்நிலையில், பிரபல யூடியூப் விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தின் திரைக்கதை மற்றும் விறுவிறுப்பு குறித்து தனது காரசாரமான விமர்சன வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இப்படத்தின் கதைக்களத்தை விளக்கிய மாறன், முதல் பாகத்தில் கேபிள் ஆப்ரேட்டரான ஜார்ஜ் குட்டி தனது சினிமா அறிவை வைத்து குடும்பத்தைக் காப்பாற்றியதையும், இரண்டாம் பாகத்தில் மறுவிசாரணையை முன்கூட்டியே கணித்து திட்டமிட்டதையும் சுட்டிக்காட்டினார். ஆனால், இந்த மூன்றாவது பாகத்தில் பெரிய பணக்காரனாக மாறும் ஜார்ஜ் குட்டி, தான் எழுதிய கதையை படமாக தயாரிக்கிறார். அவரது மகளுக்குப் பார்க்கும் திருமண வரன்கள் ஒவ்வொன்றாக தட்டிப்போக, அதற்குப் பின்னணியில் இருக்கும் காரணத்தை அவர் தேடிக் கண்டுபிடிப்பதே இத்திரிஷ்யம் 3-ன் கதை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் சுவாரஸ்யம் குறித்துப் பேசிய அவர், “படத்தின் முதல் இரண்டு மணி நேரம் பொங்கல் சாப்பிட்டது போல மந்தமாக நகர்கிறது, கடைசி அரை மணி நேரம் மட்டுமே படம் நன்றாக உள்ளது” என்று விமர்சித்துள்ளார். தனக்கு வரும் பிரச்சனைகளை ஜார்ஜ் குட்டி தேடிச் செல்கிறாரே தவிர, அவராக முன்கூட்டியே எதிர்வினை ஆற்றாமல், பிரச்சனை வந்த பிறகுதான் நடவடிக்கை எடுக்கிறார். மேலும், ஜார்ஜ் குட்டியைப் பற்றிய தகவல்களைத் திரட்டப் போகும் போது, அந்த விஷயம் உடனே அவருக்கும் தெரிந்து விடுவதால் திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது என்றும், சித்திக் கதாபாத்திரம் மொசாட் லெவலுக்கு போடும் திட்டங்கள் அனைத்தும் மொக்கையாக முடிவடைவதாகவும் சாடியுள்ளார்.
இறுதியாக, முந்தைய பாகங்களுடன் ஒப்பிடுகையில் இந்த பாகம் ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமான படமாகவே அமைந்துள்ளது என்று ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார். ஆஷா சரத்தின் வலுவான கதாபாத்திரம் இல்லாதது படத்திற்குப் பின்னடைவு என்றும், நான்காவது பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருந்தாலும், ‘சரக்கு முடிந்துவிட்டதால் இத்துடன் கடையை மூடிக் கொள்வது நல்லது’ என்றும் அவர் காரமாகப் பேசியுள்ளார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்குச் சென்றால், ஒரு சுமாரான படம் பார்த்த உணர்வை மட்டுமே ‘திரிஷ்யம் 3’ தரும் என்று கூறி தனது விமர்சனத்தை முடித்துள்ளார்
