CINEMA
“வாய்ப்பில்லை ராஜா… எவராலும் விஜய் ஆக முடியாது…!””கூட்டம் ஓட்டா மாறாதுன்னு சொன்னாங்க…!- திமுக ஆதரவு குடும்பத்தில் இருந்து கொண்டு விஜய்க்காக கெத்து காட்டிய சிபிராஜ்…!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சருமான விஜய் பொறுப்பேற்றதில் இருந்து, திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் அவருக்குத் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல நடிகரும் நடிகர் சத்யராஜின் மகனுமான சிபிராஜ், முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். சிபிராஜ் முதலமைச்சரைச் சந்தித்த புகைப்படம் மற்றும் அவர் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடிகர் சிபிராஜ் ஆரம்பத்திலிருந்தே விஜய்யின் தீவிர ரசிகராகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தீவிர ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகிறார். சிபிராஜின் தந்தையான நடிகர் சத்யராஜும், அவரது சகோதரியும் தீவிர திமுக ஆதரவாளர்களாக அறியப்படுபவர்கள். பல தருணங்களில் அவர்கள் விஜய் குறித்துக் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்தபோதும், சிபிராஜ் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வந்தார். சில சமயங்களில் தன் தந்தையின் மேடைப் பேச்சுகளுக்குக் கூட, தனது சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாகப் புன்னகையுடனும் பக்குவத்துடனும் பதிலடி கொடுத்து விஜய்யின் மீதான தன் விசுவாசத்தை அவர் நிரூபித்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு வந்தபோது சிபிராஜ் பகிர்ந்த பழைய நினைவொன்று ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. “1993 அக்டோபர் 3-ஆம் தேதி பொள்ளாச்சியில் நடந்த என் அப்பாவின் பிறந்தநாள் விழாவில், எஸ்.ஏ.சந்திரசேகர் சார் மற்றும் கேப்டன் விஜயகாந்த் அங்கிளுடன் உங்களை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது அந்த எளிமையான இளைஞன், எதிர்காலத்தில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்று ஒரு மாபெரும் சக்தியாக மாறுவார் என்று நான் நினைக்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், விஜய் இனி நடிக்க மாட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், ஒரு தம்பியாக அவரது புதிய அரசியல் பாதையை மதிப்பதாகவும், எப்போதும் அவருடன் நிற்பேன் என்றும் சிபிராஜ் பதிவிட்டிருந்தார்.”
“கூட்டம் ஓட்டாக மாறாது” – மாறிடுச்சு! “நடிகன் நாடாள முடியாது” – ஆளப்போகிறார்! “அவர் திரும்ப நடிக்கப் போய்விடுவார்” – வாய்ப்பில்லை ராஜா! “விஜய் இவராக முடியாது… அவராக முடியாது…” – எவராலும் விஜய் ஆக முடியாது!” – தேர்தல் வெற்றியின் போது சிபிராஜ் பதிவிட்ட வைரல் வரிகள்.
இந்நிலையில், தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யைச் சந்தித்த சிபிராஜ், தனது எக்ஸ் (X) பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். “நமது முதலமைச்சரைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவரை எனக்குத் தெரியும். அவருடைய பணிவு, அன்பு மற்றும் எளிமை ஆகியவை இத்தனை ஆண்டுகளாக மாறாமல் அப்படியே இருக்கின்றன என்று என்னால் பெருமையுடன் கூற முடியும். அவருக்கு நல்ல ஆரோக்கியம், தொடர் வெற்றி மற்றும் நமது மாநிலத்திற்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்” என்று அண்ணன் விஜய் மீதான தனது மாறாத அன்பை சிபிராஜ் வெளிப்படுத்தியுள்ளார்.
