CINEMA
போலீசுக்கு மீண்டும் தண்ணி காட்ட ரெடியான மோகன்லால்…!66-ஆவது பிறந்தநாளில் ‘லால் ஏட்டன்’ செய்த தரமான செய்கை! உலகமெங்கும் இன்று முதல் ‘திரிஷ்யம் 3’ தாண்டவம்…!
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரும், ரசிகர்களால் ‘லால் ஏட்டன்’ என்று பேரன்போடு அழைக்கப்படுபவருமான மோகன்லாலின் 66-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. மோகன்லால், மீனா, எஸ்தர் அனில் உள்ளிட்ட பலரது நடிப்பில், இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இருப்பினும், இந்தத் திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பாக ஒரு பெரிய சட்டப் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. இப்படத்தின் தெலுங்கு உரிமைகளின் முழு மற்றும் ஒரே உரிமையாளரான ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ‘ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம், தனது அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்காக நீதிமன்றத்தில் மனு அளித்தது.
ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் எம்.ஜே. ஆண்டனி, இயக்குநர் ஜீத்து ஜோசப் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் உள்ளிட்டோர் ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தைத் தெலுங்கு மொழியில் உலகெங்கிலும் எந்த முறையிலும் மறுஆக்கம் செய்யவோ, தயாரிக்கவோ அல்லது வெளியிடவோ கூடாது என நிரந்தரத் தடை விதிக்கக் கோரி அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது குறித்து இன்னும் 3 வாரத்திற்குள் படக்குழுவினர் விரிவான பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா ஆகாதா என்ற பெரும் குழப்பமும், கவலையும் ரசிகர்களிடையே ஏற்பட்டது. ஆனால், படக்குழு தரப்பில் இந்தச் சட்டப் பிரச்சினை படத்தின் ரிலீஸை எந்த வகையிலும் பாதிக்காது என்று கூறி, விளம்பரப் பணிகளை (Promotions) விறுவிறுப்பாக மேற்கொண்டு வந்தனர். ரசிகர்களின் நீண்ட நேரக் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பிறந்தநாள் நாயகனான மோகன்லால் தனது எக்ஸ் (X) பக்கத்தில், “திரிஷ்யம் 3 இன்று முதல் உலகமெங்கும்” என்று அதிகாரப்பூர்வமாகப் பதிவிட்டுப் படத்தின் ரிலீஸை அதிரடியாக உறுதி செய்தார்.
நீதிமன்றச் சிக்கல்களைத் தாண்டி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்திற்கு, முன்பதிவிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்துள்ளன. இதனால், இப்படம் மலையாள சினிமா வரலாற்றிலேயே ஒரு குறிப்பிடத்தக்கப் புதிய வசூல் சாதனையைப் படைக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கணிக்கின்றன. ஜார்ஜ்குட்டியின் அடுத்தடுத்த ட்விஸ்ட்டுகளைக் காண தியேட்டர்களில் ரசிகர்கள் அலைமோதி வரும் வேளையில், திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் மோகன்லாலுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளையும், படத்தின் வெற்றிக்கான வாழ்த்துகளையும் சமூக வலைத்தளங்களில் மழையாகப் பொழிந்து வருகின்றனர்.
